நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா மாபெரும் ஒரு சாதனை மைல் கல்லை தொட்டு இருக்கிறார். நாக்பூரில் நடைபெற்ற ரஞ்சிப் போட்டியில் சௌராஷ்ட்ரா அணிக்காக விளையாடும் புஜாரா விதர்பா அணியை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் எடுத்த புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா படைத்திருக்கிறார்.

புஜாரா இந்தியாவுக்காக 7195 ரன்கள், 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் சராசரி 43 ஆகும். இதே போன்று உள்ளூர் கிரிக்கெட்டிலும் புஜாரா பட்டையை கிளப்பி இருக்கிறார். 61 சதம், 77 அரை சதன் என முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவுக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் புஜாரா நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.
கவாஸ்கர் 25 ஆயிரத்து 834 ரன்கள் அடித்து முதல் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 25,396 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், ராகுல் டிராவிட் 23 ஆயிரத்து 794 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும், புஜாரா 20 ஆயிரத்து 013 ரன்கள் அடித்து நான்காவது இடத்திலும் இருக்கிறார். இந்த சீசன் ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடங்கியதிலிருந்து புஜாரா சிறப்பாக விளையாடி வருகிறார்.
முதல் போட்டியில் 49 மற்றும் 43 ரன்கள் எடுத்த புஜாரா இரண்டாவது ஆட்டத்தில் 243 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இரட்டை சதம் அடித்த பிறகும் கூட புஜாராவுக்கு இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் புஜாரா விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.