மும்பை : 2023 - 2024 ரஞ்சி ட்ராபி தொடரின் அரை இறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாடு - மும்பை அணிகள் மோதும் அரை இறுதிப் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பிய தமிழ்நாடு அணி 146 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. 42 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்களை இழந்தது தமிழ்நாடு அணி.

தமிழ்நாடு அணியின் துவக்க வீரர் சாய் சுதர்ஷன் டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் நாராயணன் ஜெகதீசன் 4 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். பிரதோஷ் 8, சாய் கிஷோர் 1 ரன் எடுத்தனர். இந்த தொடரில் சிறப்பாக ரன் குவித்து வந்த பாபா இந்திரஜித் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அதன் பின் விஜய் ஷங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் சேர்த்து 100 ரன்கள் கடக்கச் செய்தனர். அவர்களும் ஆட்டமிழந்த பின் வரிசையாக விக்கெட்களை இழந்து 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழ்நாடு அணி. மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஷர்துல் தாக்குர் 2, முஷீர் கான் 2, தனுஷ் கோட்டியான் 2, மோஹித் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து மும்பை அணி பேட்டிங் ஆடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியில் அனுபவ பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், தமிழ்நாடு விரைவில் விக்கெட்களை வீழ்த்தி 200 ரன்களுக்குள் மும்பை அணியை ஆட்டமிழக்கச் செய்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மற்றொரு ரஞ்சி கோப்பை அரை இறுதிப் போட்டியில் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.