டெல்லி: ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா பயணிக்கவுள்ள இந்தியா ஏ அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றுப் போட்டியில் செளராஷ்டிரா அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி, இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. கோவை மைதானத்தில் நடந்த போட்டி என்பதால், தமிழ்நாடு வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் புஜாராவின் அபார ரன் அவுட்டால், சாய் சுதர்சன் 82 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஏற்கனவே துலீப் டிராபி தொடரில் சாய் சுதர்சன் எதிர்பார்த்த அளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் ரஞ்சி டிராபியில் பெரிய சதங்கள் அடித்து தேர்வுக் குழுவை ஈர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதற்கேற்ப சாய் சுதர்சன் 2வது ரஞ்சி போட்டியில் அசத்தியுள்ளார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி அணியை எதிர்த்து தமிழக அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஹிம்மத் சிங் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் தமிழக அணி சார்பாக சாய் சுதர்சன் - ஜெகதீசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
இருவருமே நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பதால், இந்தப் போட்டியில் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் செய்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடக்க, முதல் விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தனர். அப்போது நவ்தீப் சைனி வீசிய பந்தில் ஜெகதீசன் 101 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் சாய் சுதர்சன் இன்னொரு பக்கம் பொளந்து கட்டினார். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 138 பந்துகளில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதன்பின் அதிரடியை அடுத்தக் கட்டத்திற்கு சாய் சுதர்சன் நகர்த்தினார். வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து சாய் சுதர்சன் தமிழக அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இதனால் சாய் சுதர்சன் விரைவாக 150 ரன்களை கடக்க, இரட்டை சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஏனென்றால் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் ”டாடி ஹன்ட்ரட்” என்று சொல்லப்படும், இரட்டை சதம், முச்சதங்களை விளாச வேண்டும். அதற்கேற்றபடி சாய் சுதர்சன் சிறப்பாக பேட்டிங் செய்தார். இன்னொரு பக்கம் வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் கடக்க, தமிழக அணியின் ஸ்கோர் 350 ரன்களை கடந்தது. தொடர்ந்து 249 பந்துகளில் ஒரு சிக்ஸ், 23 பவுண்டரி உட்பட 200 ரன்களை விளாசினார். இறுதியாக முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 388 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தப் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலமாக சாய் சுதர்சனுக்கு ஆஸ்திரேலியா பயணிக்கவுள்ள இந்தியா ஏ அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, இந்தியா ஏ அணியுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனால் இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.