Ranju trophy 2024 : இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு என்றால் அது ரஞ்சி போட்டி தான். இந்த தொடரில் விளையாடி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற எழுதப்படாத விதி இருந்து வந்தது.
தற்போது ஐபிஎல் ஆதிக்கத்தால் ரஞ்சி கிரிக்கெட் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தமிழ்நாட்டு அணியின் மிகப்பெரிய கனவாகும்.

இதுவரை தமிழ்நாடு அணி இரண்டு முறை தான் ரஞ்சி கோப்பையை வென்றிருக்கிறது. கடைசியாக 1986- 87 ஆம் ஆண்டு சீசன் தான் ரஞ்சி கோப்பையை தமிழ்நாடு அணி வென்றது. அவ்வளவு ஏன் இறுதிப்போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் நடப்பு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியுடன் தமிழ்நாடு அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 146 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணியும் 106 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் சர்துல் தாக்கூர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் தமிழக அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை மும்பை அணி தாண்டி விட்டதால், இனி இந்த போட்டி ட்ராவில் முடிந்தாலும் அவர்கள் தான் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள்.
இதனால் தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து மீண்டும் மும்பை அணியின் 10 விக்கெட்டை கைப்பற்ற வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பின் தொடர்ந்து வந்தார்.
ஒரு கட்டத்தில் மும்பை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்த போது தமிழ்நாடு அணி மிக விரைவாக மும்பை அணியை வீழ்த்த தங்களுடைய வெற்றி வாய்ப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் சர்துல் தாக்கூர் அதன் பிறகு களமிறங்கி அபாரமாக விளையாடியதால் அஸ்வினின் கனவு சுக்குநூறாக உடைந்தது. இதனால் கடுப்பான அஸ்வின் சமூக வலைத்தளத்தில் டேய் லார்ட் சர்துல் தாக்கூர் போதும் டா விட்டுரு என்று பதிவிட்டு இருக்கிறார்.