மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹரியானா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி பேட்டிங்கில் தடுமாறியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ரஹானே தலைமையிலான மும்பை அணியில் சிவம் துபே, சூரியகுமார் யாதவ், சர்துல் தாக்கூர் போன்ற ஸ்டார் வீரர்கள் பங்கேற்றனர். இதில் சூரிய குமார் யாதவ் இழந்த தனது பார்மை மீட்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சூரியகுமார் யாதவ் மொத்தமாக 28 ரன்கள் தான் அடித்திருந்தார்.

இதனால் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் திரும்பிய சூரியகுமார் யாதவ், தன்னுடைய பேட்டிங் திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். இந்த சூழலில் மும்பை அணியின் தொடக்க வீரர் மாத்ரே டக் அவுட் ஆகியும் சித்தார்த் நான்கு ரன்களிலும், ஆகாஷ் ஆனந்த் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து சூரியகுமார் யாதவ், ரஹானே ஜோடி களம் இறங்கியது. 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை மும்பை இழந்ததால் சூரியகுமார் யாதவ் கொஞ்சம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சூரியகுமார் யாதவ் தனது கவுண்டர் அட்டாக் இன்னிங்சை வெளிப்படுத்தினர்.
ஹரியானா வீரர்கள் வீசிய பந்தை இரண்டு பவுண்டரிக்கு விரட்டிய சூரியகுமார் யாதவ், அணியை சரிவிலிருந்து மீட்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சுமித் குமார் வீசிய பந்தை சூரியகுமார் கணிக்க தவறியதால், பந்து திடீரென்று பேட்டிற்கும், பேடுக்கும் இடையே உள்ளே சென்று மிடில் ஸ்டெம்பை பதம் பார்த்தது.
இதனால் ஸ்டெம்ப் பறந்து சென்றது. சூரிய குமார் யாதவ் 9 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரகானே 30 ரன்களும், சிவம் துபே 28 ரன்களும் எடுக்க சர்துல் தாக்கூர் 15 ரன்களில் வெளியேறினார்.ஒரு கட்டத்தில் 113 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறிய போது, ஷாம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கொட்டியான் ஆகியோர் ஜோடி சென்று அபாரமாக விளையாடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர். இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 150 ரன் க்கு மேல் சேர்த்து விளையாடி வருகிறது. 76 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 எடுத்து உள்ளனர்.