நாக்பூர்: 2025 ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் விதர்பா அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில், விதர்பா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 169 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. அந்த அணி தற்போது 297 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இது தமிழ்நாடு அணிக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சி கோப்பையைப் பொறுத்தவரை, ஒரு போட்டி டிராவில் முடிந்தால், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 353 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் மூத்த பேட்ஸ்மேன் கருண் நாயர் அபாரமாக விளையாடி 122 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஆடிய தமிழ்நாடு அணி 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆண்ட்ரே சித்தார்த் 65 ரன்கள் எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 128 ரன்கள் முன்னிலை பெற்றது.
ரஞ்சி கோப்பை போட்டிகள் நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறும் எனும் நிலையில், மூன்றாவது நாள் முடிவில் விதர்பா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து இருக்கிறது. அந்த அணி இப்போதே 297 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
விதர்பா அணி இந்த போட்டியை டிரா செய்யும் நோக்கத்திலேயே விளையாடும். ஏனெனில் இந்த போட்டியை டிரா செய்தாலே விதர்பா அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இந்தப் போட்டி டிராவானால் முதல் இன்னிங்ஸில் 128 ரன்கள் முன்னிலை பெற்றதால் விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
ஆனால், தமிழ்நாடு அணி இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்றால், விதர்பாவின் மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திவிட்டு, நான்காம் நாள் அன்று 300க்கும் மேற்பட்ட இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும். அது சவாலானதுதான். என்றாலும், இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற அதுதான் ஒரே வழியாகவும் உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு அணி மிகப்பெரிய சிக்கலில் உள்ளது. கருண் நாயர் அடித்த சதம் தான் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.