ரஞ்சி டிராபி 2025: கருண் நாயர் சதம்..சாம்பியன் பட்டத்தை வென்ற விதர்பா..கேரள அணிக்கு பைனலில் ஏமாற்றம்
நாக்பூர் : ரஞ்சி கோப்பை 2025 ஆம் ஆண்டு சீசனில் விதர்பா அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 2018 19 ஆம் ஆண்டு சீசனுக்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து விதர்பா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இது விதர்பா அணிக்கு மூன்றாவது கோப்பையாகும்.
இறுதிப்போட்டியில் முதல்முறையாக கேரள அணியும் விதர்பா அணியும் பல பரிட்சை நடத்தியது. நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய விதர்பா அணியில் டேனிஷ் மல்வேர் அபாரமாக விளையாடி 153 ரன்கள் சேர்த்தார். அதேபோன்று நட்சத்திர வீரர் கருண் நாயர் 86 ரன்கள் எடுக்க முதல் இன்னிங்சில் விதர்பா அணி 379 ரன்கள் குவித்தது. கேரள பந்துவீச்சு தரப்பில் நித்திஷ், ஈடன் ஆப்பிள் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
இதனை அடுத்து கேரள அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் களம் இறங்கியது. ஆதித்யா 79 ரன்களும், அகமது இம்ரான் 37 ரன்கள் எடுக்க கேப்டன் சச்சின் பேபி அபாரமாக விளையாடி 98 ரன்கள் குவித்து இரண்டு ரன்களில் சதத்தை தவறவிட்டார். விதர்பா அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கேரளா தாண்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கீழ் வரிசை வீரர்கள் தடுமாறியதால் கேரள அணி 342 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து விதர்பா அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதில் அனுபவ வீரர் கருண் நாயர் அபாரமாக விளையாடி 295 பந்துகளை எதிர் கொண்டு 135 ரன்கள் விளாசினார்.
இதேபோன்று முதல் இன்னிங்சை சதம் அடித்த டேனிஷ் மல்வேர் இரண்டாவது இன்னிங்ஸில் 73 ரன்கள் எடுத்தார். முதலில் அதிக ஸ்கோரை எடுத்து முன்னிலை பெற்றதால் விதர்பா அணி இந்த போட்டியை டிரா நோக்கி கொண்டு சென்றது. தொடர்ந்து விளையாடி வந்த விதர்பா அணி ஒன்பது விக்கெட்டு இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டியை வெற்றி தோல்வி இன்றி சமனில் முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதை அடுத்து போட்டி சமனில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்திருந்ததால் அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டார்கள்.


Click it and Unblock the Notifications