டெல்லி : ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி விளையாடுவதால் பெருமளவு ரசிகர்கள் இந்த போட்டியை காணக் கூடினர். டெல்லி அணி சார்பாக விராட் கோலி இந்த போட்டியில் சாதாரண வீரராக தான் களமிறங்கினார். டெல்லி அணியின் கேப்டனாக ஆயுஸ் பதோணி செயல்படுகிறார்.
இந்த நிலையில் விராட் கோலியின் பேடிங்கை பார்ப்பதற்காக காலை ஐந்து மணியிலிருந்து கடும் வெயிலில் மைதானத்திற்கு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விராட் கோலியின் பேட்டிங்கை இன்று பார்க்கலாம் என ரசிகர்கள் அதிக அளவு காத்திருந்தனர்.

ஆனால் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பதோனி, முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தி அடைந்தனர். எனினும் விராட் கோலியை ஃபீல்டிங் செய்யும் போது பார்க்கலாம் என்ற ஆறுதல் மட்டும் அவர்களுக்கு இருந்தது. மேலும் ரயில்வே அணி விரைவாக ஆட்டம் இழந்து விட்டால் இன்று டெல்லி அணி பேட்டிங் செய்யும்.
இதனால், விராட் கோலியின் பேட்டிங்கை காண முடியுமா என்ற எதிர்பார்க்கும் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் விராட் கோலி டெல்லி அணிக்கு நான்காவது வீரராக தான் களமிறங்குகிறார். இந்த நிலையில் விராட் கோலியை போல் டெல்லி அணியில் மற்றொரு ஸ்டார் வீரரான ரிஷப் பண்டும் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடந்த 23ஆம் தேதி தொடங்கிய ரஞ்சிப் போட்டியில் கூட பண்ட், விளையாடி இருந்தார். ஆனால் பண்ட், இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் சாம்பியன்ஸ் கோப்பை போன்ற தொடரில் பங்கேற்பதற்காக பண்ட், ஓய்வெடுத்துக் கொண்டார். இதுவும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கோலி, பண்ட் என இருவரையும் பார்த்துவிடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் விராட் கோலி ஸ்லிப்பில் நின்றவாறு பில்டிங் செய்து வருகிறார். கோலி கேப்டன் இல்லை என்றாலும் பவுலர்கள் மற்றும் பில்டர்களிடம் பல அறிவுகளை வழங்கி களத்தில் செயல்படுகிறார். விராட் கோலி விளையாடுவதால் இந்த போட்டியை சர்வதேச தரத்தில் பிசிசிஐ ஒளிபரப்பு செய்கிறது.