டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இன்று விளையாடுகிறார். ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சார்பாக விராட் கோலி விளையாடுகிறார். கடந்த சில மாங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பி வருவதால், அனைத்து ஸ்டார் வீரர்களும் ரஞ்சிக்கு திரும்ப வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் போட்டிக்கு அதிக ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்த்த டெல்லி கிரிக்கெட் சங்கம் இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த சூழலில் விராட் கோலி ஆட்டத்தை பார்ப்பதற்காக காலை 7 மணி முதல் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்திற்கு முன்பு கூடியது.

இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்காத போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினர். மேலும் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஆட்டத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மைதானம் முன்பு கூடி இருந்தனர்.

மேலும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஆர்சிபி !ஆர்சிபி ! என கத்தினர். இதனால் டெல்லி கிரிக்கெட் மைதானம் திருவிழா கோலம் பூண்டது. ஏதோ சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு விட்டது. இதை பார்க்கும் போது கோ திரைப்படத்தில், நான் நடந்தால் என்ன ஆகும் பாக்குறியா என முதலமைச்சர் ஆக இருக்கும் பிரகாஷ்ராஜ் திடீரென்று சாலையில் காரை நிறுத்திவிட்டு நடந்து செல்லும் போது பெருமளவு கூட்டம் கூடும் காட்சியை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரோகித் சர்மா மும்பையில் விளையாடிய போது ஒரு சிலர் மட்டுமே கூடியதாகவும், ஆனால் விராட் கோலிக்கு பெருமளவு கூட்டம் கூடி இருப்பதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் உச்சபட்ச வீரர் யார் என்பது தெள்ளத்தெளிவாக மாறிவிட்டதாக கோலி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ரஞ்சிப் போட்டி முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால், இது போல் ஸ்டார் வீரர்கள் அடிக்கடி ரஞ்சியில் விளையாட வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.