மும்பை: இந்திய அணியின் நட்சத்திர இளம் பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சகோதரர் ரஞ்சி டிராபி தொடரில் திரிபுரா அணிக்காக விளையாடி வருவது தெரிய வந்துள்ளது. பரோடா அணிக்கு எதிரான போட்டியில் நம்பர் 3ல் களமிறங்கி 82 ரன்களை விளாசியதன் மூலமாக ரசிகர்கள் பலரும் அவரை அறிந்து ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் சகோதரர்கள் ஒரே நேரத்தில் தேசிய அணிக்காக விளையாடுவது சாதாரண விஷயமாகும். ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டில் கூட இர்ஃபான் பதான் - யூசுப் பதான் சகோதரர்கள், ஹர்திக் பாண்டியா - க்ருனால் பாண்டியா சகோதரர்கள் விளையாடி இருக்கின்றனர். இந்த வகையில் புதியா சர்ஃபராஸ் கான் - முஷீர் கான் இணை உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறது.

இந்த நிலையில் புதிதாக மற்றொரு சகோதரர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏராளமான சாதனைகளை செய்துள்ளார். ஒரே டெஸ்ட் தொடரில் 700 ரன்களை குவித்தது, குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை விளாசியது என்று ஜெய்ஸ்வாலின் சாதனைகள் அடுத்தடுத்து உச்சம் பெற்று வருகிறது.
தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சகோதரரான தேஜஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட தொடங்கியுள்ளார். 27 வயதாகும் தேஜஸ்வி ஜெய்ஸ்வால், அவரின் தம்பியை போலவே இடதுகை பேட்ஸ்மேன். தொடக்க வீரராக அல்லாமல் நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்யும் தேஜஸ்வி ஜெய்ஸ்வால், ரஞ்சி டிராபி தொடரில் திரிபுரா அணிக்காக விளையாடி வருகிறார்.
ஏற்கனவே மும்பை மற்றும் மேகாலயா அணிகளுக்கு எதிரான போட்டியில் திரிபுரா அணிக்காக விளையாடிய போது தேஜஸ்வி ஜெய்ஸ்வால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. அந்தப் போட்டியில் 4 மற்றும் 13 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் பரோடா அணிக்கு எதிராக நடந்து வரும் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை தேஜஸ்வி ஜெய்ஸ்வால் வெளிப்படுத்தியுள்ளார்.
பிக்ரம்குமார் தாஸ் - ஜே சிங் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தனர். அப்போது 97 ரன்களில் பிக்ரம்குமார் ஆட்டமிழக்க, பின்னர் வந்த தேஜஸ்வி ஜெய்ஸ்வால் 159 பந்துகளில் ஒரு சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 82 ரன்கள் எடுத்து அசத்தினார். டாப் ஆர்டரின் அபார ஆட்டத்தால் திரிபுரா அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 482 ரன்களை குவித்துள்ளது. இதனால் தேஜஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில அணிகளுக்காக ட்ரையல்ஸ் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.