கல்யாணி: 2025-26 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், சர்வீஸ் அணிக்கு எதிராக பெங்கால் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். எலைட் குரூப் சி பிரிவில், சர்வீசஸ் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்ற பெங்கால் அணி, காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேற்கு வங்க மாநிலம் கல்யாணியில் நடந்த இந்தப் போட்டியில் கடைசி நாளான இன்று, பெங்கால் அணி 20 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்தது. முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 75 ஓவர்களில் 287 ரன்களுக்கும் ஆல் அவுட்டான சர்வீசஸ் அணி, போராடியது. ஆதித்யா குமார் 26, ஜெயந்த் கோயத் 68* ரன்கள் எடுத்தும் பயனில்லை.

முன்னதாக, அனுபவமிக்க வீரர் சுதீப் சட்டர்ஜியின் 209 ரன்கள் உதவியால் பெங்கால் 519 ரன்கள் குவித்திருந்தது.இந்தப் போட்டியில் முகமது ஷமி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2வது இன்னிங்சில் 16 ஓவர்கள் வீசி 51 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணியில் ஒருநாள், டெஸ்ட் என இடம் தர மறுக்கும் தேர்வுக்குழுவினர் முகத்தில் ஷமி மீண்டும் கரியை பூசியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்கால் அணிக்கு ஏழு புள்ளிகள் கிடைத்து, மொத்தமாக 30 புள்ளிகளுடன் குரூப் சி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. ஆறு போட்டிகளில் கிடைத்த இந்தப் புள்ளிகளுடன், நாக் அவுட் சுற்றுக்குரிய இடத்தையும் பெங்கால் உறுதி செய்தது. இரண்டாவது இடத்திற்கான போட்டி சர்வீசஸ், ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் அணிகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வருகிறது.
லக்னோவில், ஜார்க்கண்ட் அணி உத்தரப் பிரதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 301 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு சீசனின் பெரிய வெற்றிகளில் ஒன்றைப் பதிவு செய்தது. உத்தரப் பிரதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 84 ரன்களுக்கு சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் சவுரப் சேகர் 7.4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தவே, ஜார்க்கண்ட் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள விதர்பாவுக்குப் பின்னால் இரண்டாவது இடத்திற்கு நகர்ந்தது.