சண்டிகர்: ரஞ்சி டிராபி தொடரில், சண்டிகர் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா வீரர் பிரித்வி ஷா அதிவேக இரட்டைச் சதம் விளாசிச் சாதனை படைத்தார். இருப்பினும், அந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது, முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த சக வீரரும், சிஎஸ்கே கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்டது. ஆனால், ருதுராஜ் செய்த ஒரு நெகிழ்ச்சியான செயல், தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் சண்டிகர் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபி போட்டியில், பிரித்வி ஷா தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி மரண அடி காட்டினார். போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், வெறும் 141 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி, ரஞ்சி டிராபி வரலாற்றில் இரண்டாவது அதிவேக இரட்டைச் சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். மொத்தமாக 156 பந்துகளில் 222 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

பிரித்வி ஷாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் இருந்தபோதிலும், போட்டியின் ஆட்ட நாயகன் விருது மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அறிவிக்கப்பட்டது. அவர் முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் குவித்து, மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற முக்கியக் காரணமாக இருந்தார். போட்டியின் முடிவில் இது முக்கியமானதாக அமைந்ததால், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட், நெகிழ வைக்கும் செயலைச் செய்தார். அவர் உடனடியாகப் பிரித்வி ஷாவை அழைத்து, தனது ஆட்ட நாயகன் விருதை அவருடன் பகிர்ந்து கொண்டார். பிரித்வி ஷாவின் அபாரமான ஆட்டத்தைப் பாராட்டும் விதமாகவும், அவரது முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் ருதுராஜ் இந்தச் செயலைச் செய்தார். இருவரும் ஒன்றாக விருதை ஏந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பகிரப்பட்ட பெருமை, உண்மையான விளையாட்டு உணர்வு. ருதுராஜ் கெய்க்வாட் தனது ஆட்ட நாயகன் விருதைப் பிரித்வி ஷாவுடன் பகிர்ந்து கொண்டார். அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஷாவின் அற்புதமான 222 ரன்களை அங்கீகரிக்கும் செயல் இது" என்று பதிவிட்டுள்ளது. பிரித்வி ஷா சிஎஸ்கே அணிக்கு வரப் போகிறார் என்ற ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவலும் சில வாரங்களுக்கு முன் வெளியாகி இருந்தது
மும்பை அணியிலிருந்து விலகி, இந்த சீசனில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்நோக்கியுள்ளார். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத நிலையில், இந்த இரட்டைச் சதம் அவருக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
இந்த இன்னிங்ஸில், பிரித்வி ஷா தனது சதத்தை வெறும் 72 பந்துகளில் எட்டினார். இது ரஞ்சி டிராபி வரலாற்றில் ஆறாவது அதிவேக சதமாகும். ரஞ்சி டிராபி (எலைட் நிலை) வரலாற்றில், ரவி சாஸ்திரி (123 பந்துகள்) மட்டுமே இவரை விட வேகமாக இரட்டைச் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.