ஷிமோகா: சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த வீரர் கருண் நாயர், தனது பேட்டால் பிசிசிஐ-யின் தேர்வுக் குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். கோவா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில், கர்நாடக அணி சரிவைச் சந்தித்த நிலையில், தனி ஒருவராகப் போராடிய கருண் நாயர், ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் குவித்து அசத்தினார்.
கர்நாடக அணியின் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாலும், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு, "தனது கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடிந்துவிடவில்லை" என்ற செய்தியை இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் உரக்கச் சொல்லியிருக்கிறார். ஷிமோகாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், கர்நாடக அணி தனது முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் குவித்தது. இதில், கருண் நாயரின் பங்கு மட்டும் 174 ரன்கள் ஆகும்.

முதல் ரஞ்சிப் போட்டியில் 73 ரன்கள் அடித்திருந்த கருண் நாயர், இந்தப் போட்டியிலும் தனது சிறப்பான ஃபார்மைத் தொடர்ந்தார். கோவா அணியின் பந்துவீச்சைத் திறம்பட எதிர்கொண்ட அவர், போட்டியின் முதல் நாளிலேயே தனது சதத்தைப் பதிவு செய்தார். இரண்டாம் நாளில் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி விக்கெட்டான வித்வத் காவேரப்பா ரன் அவுட் ஆனதால், நாயர் 174 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
கோவா தரப்பில் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் வாசுகி கௌசிக் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி கர்நாடக அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தபோதும், கருண் நாயர் மட்டும் தனி ஒருவராகப் போராடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
2024/25 ரஞ்சி சீசனில் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்தால், கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார். ஆனால், 4 போட்டிகளில் விளையாடிய அவர், 25.62 என்ற சராசரியுடன் 205 ரன்களை மட்டுமே எடுத்ததால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்துச் சமீபத்தில் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், "கருண் நாயரிடம் நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம். தேவ்தத் படிக்கல் எங்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்குகிறார். ஒவ்வொரு வீரருக்கும் 15-20 வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம், ஆனால் அது எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை" என்று கூறியிருந்தார்.
தேர்வாளர்களால் இந்திய அணியின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், ரஞ்சி டிராபியில் மீண்டும் ஒரு அபாரமான சதத்தை விளாசி, தனது விடாமுயற்சியையும், போராட்ட குணத்தையும் கருண் நாயர் மீண்டும் நிரூபித்துள்ளார். இந்திய அணிக்கு மூன்றாவது முறையாகத் திரும்பும் தனது கனவை இன்னும் கைவிடவில்லை என்பதை இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.