மும்பை: ப்ரித்வி ஷாவின் கதை முடிந்தது என பலரும் நினைத்து இருக்கும் நிலையில் மும்பை அணிக்கு எதிராக சதம் அடித்து தெறிக்கவிட்டுள்ளார் அவர். எந்த அணி தன்னை கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காட்டியதோ, எந்த அணிக்காகத் தனது ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி விளையாடினாரோ, அதே அணிக்கு எதிராகவே சதம் அடித்து பதிலடி கொடுத்திருக்கிறார் இளம் புயல் ப்ரித்வி ஷா.
தன்னை வளர்த்துவிட்ட மும்பை அணிக்காக இனி விளையாடப் போவதில்லை என்று முடிவெடுத்து, மகாராஷ்டிரா அணிக்காகக் களமிறங்கியுள்ள அவர், ரஞ்சி டிராபிக்கு முன் நடந்த பயிற்சி ஆட்டத்தில், மும்பை பந்துவீச்சை சிதறடித்து, சதம் விளாசி, "நான் இன்னும் ஃபார்மில்தான் இருக்கிறேன்" என்று தேர்வுக்குழுவினருக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார்.
ரஞ்சி டிராபி 2025-26 சீசனுக்கான பயிற்சி ஆட்டத்தில், மகாராஷ்டிரா மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில், மகாராஷ்டிரா அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய ப்ரித்வி ஷா, மற்றொரு தொடக்க வீரரான அர்ஷின் குல்கர்னியுடன் இணைந்து மும்பை பந்துவீச்சை சின்னாபின்னமாக்கினார்.
ஒருபுறம் அர்ஷின் குல்கர்னி ருத்ரதாண்டவம் ஆட, மறுபுறம் ப்ரித்வி ஷா, நிதானமாகவும், அதே சமயம் ஆக்ரோஷமாகவும் விளையாடி ரன்களைக் குவித்தார். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 305 ரன்கள் என்ற பிரம்மாண்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்து, மும்பை அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதிரடியாக விளையாடிய அர்ஷின் குல்கர்னி, வெறும் 140 பந்துகளில் 186 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ப்ரித்வி ஷா, 140 பந்துகளைச் சந்தித்து, தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இறுதியில், அவர் 116 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தனது முன்னாள் அணிக்கு எதிராகவே சதம் அடித்ததன் மூலம், தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
மும்பை கிரிக்கெட்டின் அடுத்த சச்சின் என்று வர்ணிக்கப்பட்ட ப்ரித்வி ஷா, சில ஆண்டுகளாக ஃபார்ம் இல்லாமலும், சர்ச்சைகளாலும் தவித்து வந்தார். இந்திய அணியில் தனது இடத்தை இழந்த அவர், ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகச் செயல்படத் தவறினார். இதனால், மும்பை ரஞ்சி அணியிலும் அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்குப் புத்துயிர் கொடுக்கும் நோக்கில், இந்த சீசனில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாட அவர் முடிவெடுத்தார். புதிய அணி, புதிய தொடக்கம் என்பது போல, மகாராஷ்டிரா அணிக்காகக் களமிறங்கியது முதலே ப்ரித்வி ஷா சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். தற்போது மும்பைக்கு எதிராகச் சதமும் விளாசி, தனது கம்பேக்கை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
25 வயதே ஆகும் ப்ரித்வி ஷாவுக்கு, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க இன்னும் காலம் இருக்கிறது. இந்த ரஞ்சி சீசன், ப்ரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு 'வாழ்வா-சாவா' பருவம் ஆகும். இந்த சதம், வெறும் ரன் கணக்கு மட்டுமல்ல, 'நான் இன்னும் ஃபார்மில்தான் இருக்கிறேன், என்னை மறக்காதீர்கள்' என்று தேர்வுக்குழுவினருக்கும், தனது முன்னாள் அணிக்கும் அவர் அனுப்பியுள்ள செய்தியாகும். தொடர்ந்து இது போல ரன் குவித்தால் ப்ரித்வி ஷா இந்திய அணிக்கு திரும்பவும் வாய்ப்பு உள்ளது.