சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் இளம் அதிரடி வீரர் பிரித்வி ஷா, ரஞ்சி டிராபி தொடரில் அதிரடி இரட்டை சதம் அடித்து, தனது ஃபார்மை மீட்டு இருக்கிறார். மகாராஷ்டிரா அணிக்காக ஆடிய அவர், சண்டிகர் அணிக்கு எதிராக பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து, வெறும் 141 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மும்பை அணியிலிருந்து ஒழுக்கமின்மை மற்றும் உடற்தகுதி குறைபாடு காரணமாக கடந்த ஆண்டு நீக்கப்பட்ட பிரித்வி ஷா, இந்த சீசனில் மகாராஷ்டிரா அணிக்காகக் களமிறங்கியுள்ளார். இந்த அணி மாற்றம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் நடைபெறும் ரஞ்சி 'பி' பிரிவு லீக் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, பிரித்வி ஷா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை மிரள வைத்தார்.

இரண்டாவது இன்னிங்சில் களம் கண்ட 25 வயதான பிரித்வி ஷா, சண்டிகர் பந்துவீச்சைத் துவம்சம் செய்தார். அவர் தனது சதத்தை வெறும் 72 பந்துகளில் எட்டினார். இது ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஆறாவது அதிவேக சதமாகும். சதமடித்த பின்பும் ஓயாத அவர், மேலும் அதிரடியாக ஆடி 141 பந்துகளில் தனது இரட்டைச் சதத்தை நிறைவு செய்தார்.
இதன்மூலம், முதல் தர கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் அடித்த மூன்றாவது அதிவேக இரட்டைச் சதம் இதுவாகும். இந்தப் பட்டியலில் தன்மே அகர்வால் (119 பந்துகள், 2024) மற்றும் ரவி சாஸ்திரி (123 பந்துகள், 1985) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
மொத்தமாக 156 பந்துகளை சந்தித்த பிரித்வி ஷா, 29 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 222 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த காட்டடி ஆட்டத்தால், மகாராஷ்டிரா அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 52 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 464 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சண்டிகர் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. அர்ஜுன் ஆசாத் (63*) மற்றும் மனன் வோரா (53*) ஆகியோர் களத்தில் உள்ளனர். போட்டி மகாராஷ்டிரா அணியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பிரித்வி ஷாவின் இந்த அபாரமான ஆட்டம், இந்திய அணித் தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. தனது உடற்தகுதி மற்றும் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
டெல்லியில், இமாச்சலப் பிரதேசத்திற்கு எதிரான போட்டியில், டெல்லி வீரர் ஆயுஷ் டோசேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 75 ரன்கள் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து 62 ரன்களுடன் களத்தில் உள்ளார். டெல்லி அணி 329 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
சொந்த மண்ணில் சட்டீஸ்கர் அணியை எதிர்கொண்ட மும்பை, முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சட்டீஸ்கர், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
பெங்கால் மற்றும் குஜராத் அணிகள் மோதும் போட்டியில், பெங்கால் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமது 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் குஜராத் அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்கால் அணி 282 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஜம்மு & காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி, ராஜஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் 24 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்டினார். இதனால் ராஜஸ்தான் 89 ரன்களுக்குச் சுருண்டது. ஜம்மு & காஷ்மீர் அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.