டெல்லி: 2025 ரஞ்சி டிராபி தொடரில் ரிஷப் பண்ட் அணியை இரண்டே நாளில் சுருட்டி வீசினார் ரவீந்திர ஜடேஜா. ரிஷப் பண்ட் இடம் பெற்று இருந்த நிலையில் டெல்லி அணி ரஞ்சி டிராபியில் சிறப்பாக ரன் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தனி ஆளாக டெல்லி அணியின் குடுமியை பிடித்து ஆட்டிவிட்டார் ரவீந்திர ஜடேஜா.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஜடேஜா 12 விக்கெட்களை சாய்த்தார். இந்த போட்டியில், சௌராஷ்டிரா அணிக்கு எதிராக டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரவீந்திர ஜடேஜா 17.4 ஓவர்களில் 66 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை சாய்த்தார்.

முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 16 ரன்கள் மட்டுமே எடுத்து தர்மேந்திரசிங் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து இருந்தார். ஆயுஷ் பதோனி 60 ரன்களும், யாஷ் துல் 44 ரன்களும் எடுத்து டெல்லி அணி 188 ரன்கள் சேர்க்க காரணமாக இருந்தனர். அடுத்து ஆடிய சௌராஷ்ட்ரா அணி 271 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் ஹர்விக் தேசாய் 93 ரன்களும், வசமடா 62 ரன்களும் சேர்த்து இருந்தனர். ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் புஜாராவும் ஆடினார். அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்சில் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது டெல்லி அணி. ஆனால், ரவீந்திர ஜடேஜா வரிசையாக விக்கெட்களை சாய்க்க துவங்கினார். அவர் இடைவிடாமல் 12.2 ஓவர்களை வீசி டெல்லி அணியை திணற வைத்தார். ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் ஜடேஜா பந்து வீசினார்.
12.2 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை சாய்த்தார் ரவீந்திர ஜடேஜா. இதை அடுத்து இரண்டாவது நாளின் பாதியில் டெல்லி அணி 94 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. சௌராஷ்டிரா அணிக்கு 12 ரன்கள் என்ற சிறிய இலக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது.
அந்த இலக்கை 3.1 ஓவரிலேயே சௌராஷ்டிரா அணி விக்கெட் இழப்பின்றி எட்டியது. இதை அடுத்து டெல்லி அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சௌராஷ்டிரா. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 12 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருந்தார் ரவீந்திர ஜடேஜா.
தற்போது ரஞ்சி டிராபியில் ஆடி வரும் இந்திய டெஸ்ட் அணி வீரர்களில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ரோஹித் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பிற வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தனர்.