சென்னை: சர்வதேச டி20 கிரிக்கெட்டின் அதிரடி ஃபினிஷராக அறியப்பட்ட ரிங்கு சிங், டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தேவையான பொறுமையும், திறமையும் தன்னிடம் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கோயம்புத்தூரில் தமிழ்நாடு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி போட்டியில், உத்தரப் பிரதேச அணிக்காக அபாரமாக விளையாடிய அவர், 176 ரன்கள் குவித்து அணியின் சரிவைத் தடுத்து, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறச் செய்தார்.
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 455 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய உத்தரப் பிரதேச அணி, ஒரு கட்டத்தில் தடுமாறியபோது, 5-ம் வரிசையில் களமிறங்கினார் ரிங்கு சிங். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 98 ரன்களுடன் களத்தில் இருந்த அவர், புதன்கிழமை தனது 9-வது முதல் தர டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்ததுடன், உத்தர பிரதேச அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றார்.

மொத்தம் 248 பந்துகளைச் சந்தித்த ரிங்கு சிங், தனது வழக்கமான அதிரடியுடன் 17 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். குறிப்பாக, பின்வரிசை வீரர்களுடன் இணைந்து அவர் அமைத்த கூட்டணிகள், உத்தரப் பிரதேச அணி முன்னிலை பெற முக்கியக் காரணமாக அமைந்தது. சிவம் சர்மாவுடன் 7-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள், கார்த்திக் யாதவுடன் 8-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள், ஆகிப் கானுடன் 9-வது விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்து வியப்பை ஏற்படுத்தினார் ரிங்கு சிங்.
பின்னர் வித்யுத் பந்துவீச்சில் சோனு யாதவிடம் கேட்ச் கொடுத்து 176 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், உத்தரப் பிரதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 460 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், தமிழ்நாடு அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைக் கடந்து, 5 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஒருவேளை இந்தப் போட்டி டிராவில் முடிந்தால், முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்ற அணிக்கு 3 புள்ளிகளும், மற்ற அணிக்கு 1 புள்ளியும் வழங்கப்படும் என்பதால், ரிங்கு சிங்கின் இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகப் பந்துவீச்சைப் பொறுத்தவரை, இளம் வீரர் வித்யுத் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஆர். சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். சர்வதேச டி20 போட்டிகளில் தனது முத்திரையைப் பதித்துள்ள ரிங்கு சிங், இந்த இன்னிங்ஸின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தேவையான பொறுமையும், நுணுக்கமும் தன்னிடம் உள்ளது என்பதை பிசிசிஐ தேர்வாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்துள்ளார்.