மும்பை: இந்தியா ஏ அணியில் தனக்கு இடம் மறுக்கப்பட்டதற்கு, தனது பேட்டால் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெறியுடன் ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்கிய நட்சத்திர வீரர் சர்பராஸ் கானுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. தனது பிரம்மாண்டமான இன்னிங்ஸ் மூலம் தேர்வாளர்களுக்கு பதில் அளிக்க நினைத்த சர்பராஸ் கானுக்கு, விரக்தி மட்டுமே மிஞ்சியது.
சத்தீஸ்கர் அணிக்கு எதிராக மும்பையின் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில், சர்பராஸ் கான் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில், சத்தீஸ்கர் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வடேவின் பந்துவீச்சை எதிர்கொண்டார் சர்பராஸ். தனது 6வது பந்தில், ஆன்-சைடில் ஒரு பெரிய ஷாட் அடிக்க முயன்றார். ஆனால், பந்து நேராக டீப்பில் நின்று கொண்டிருந்த ஷஷாங்க் சிங்கிடம் தஞ்சமடைந்தது. இந்தச் சீசனில் தனது சொந்த மண்ணில் ஆடிய முதல் போட்டியிலேயே வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து அவர் வெளியேறினார். முன்னதாக, ஸ்ரீநகரில் ஜம்மு & காஷ்மீர் அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில், அவர் 42 மற்றும் 32 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரத் தொடக்கத்தில், இந்தியா ஏ அணியில் சர்பராஸ் கான் பெயர் இடம்பெறாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, அணிக்குத் திரும்புவதே சர்பராஸ் புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம் என்று தெரியவந்தது.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரில் தனது வழக்கமான 5-ம் இடத்தில் களமிறங்க உள்ளார். சர்பராஸ் கானும் ஒரு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், அவரை அணியில் எடுத்து பெஞ்சில் உட்கார வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தேர்வாளர்கள் கருதியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த நிகழ்வுகளை அறிந்த ஒரு முன்னாள் தேசியத் தேர்வாளர், சர்பராஸ் கான் இந்திய அணிக்குள் நுழைய இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "சர்பராஸ், மும்பை அணி நிர்வாகத்திடமும், அணியின் மூத்த வீரரான அஜிங்க்யா ரஹானேவிடமும் பேசி, ரஞ்சி அணியில் 3-ம் இடத்தில் பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும். அங்கு அவர் புதிய பந்தை எதிர்கொள்ள நேரிடும். அவர் தொடர்ந்து 5 அல்லது 6-ம் இடத்தில் பேட்டிங் செய்தால், அது உதவாது. இந்திய அணியில் அந்த இடங்களுக்கு அதிக ஆல்-ரவுண்டர் தேர்வுகள் உள்ளன" என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில், 3-ம் இடத்திற்குத்தான் இன்னும் ஒரு நிலையான வீரர் அமையவில்லை. இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு நீண்ட வாய்ப்புகள் வழங்க அணி நிர்வாகம் தயாராக உள்ளது. இந்நிலையில், சர்பராஸ் கான் 3-ம் இடத்தில் சிறப்பாகச் செயல்பட்டால், இந்திய டெஸ்ட் அணியின் கதவுகள் அவருக்காகத் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் அவர் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து இருக்கிறார்.