அகமதாபாத்: 2024-25 ரஞ்சி டிராபி தொடரில், அரை இறுதிப் போட்டியில் வெறும் இரண்டு ரன்கள் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் கேரளா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி மாபெரும் வரலாறு படைத்துள்ளது. முதன்முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது கேரளா அணி.
முன்னதாக காலிறுதிப் போட்டியில் கேரளா அணி, ஜம்மு காஷ்மீரை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் குஜராத் அணியை சந்தித்தது. இந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் இரண்டு ரன் முன்னிலை பெற்றது. பின்னர் ஐந்தாம் நாள் ஆட்டத்தை சமாளித்து இந்தப் போட்டியை டிரா செய்து கேரளா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ரஞ்சி டிராபி தொடரைப் பொறுத்தவரை, போட்டி டிராவில் முடிவடைந்தால், முதல் இன்னிங்ஸில் எந்த அணி முன்னிலை பெற்று இருக்கிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். கேரளா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கேரளா 457 ரன்கள் எடுத்தது.
கேரளா அணியின் முகமது அசாருதீன் 177 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். சலாம் நிசார் 52 ரன்களும், சச்சின் பேபி 69 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய குஜராத் அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் பிரியங்க் பாஞ்சல் 148 ரன்கள் சேர்த்தார். ஜெய்மீத் பட்டேல் 79 ரன்களும், ஆர்யா தேசாய் 73 ரன்களும் எடுத்தனர்.
எனினும், அந்த அணி அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 455 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கேரளா அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு ரன்கள் முன்னிலை பெற்றது.
போட்டியின் ஐந்தாவது நாள் அன்று கேரளா இரண்டு ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடியது. இரண்டாம் இன்னிங்ஸில் கேரளாவின் 10 விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றி பெற முயற்சி செய்தது குஜராத். ஆனால், 46 ஓவர்கள் பந்து வீசி கேரளா அணியின் 4 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியது குஜராத்.
கேரளா இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து இருந்த போது ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. போட்டி டிராவில் முடிந்தது. விதிப்படி முதல் இன்னிங்ஸில் பெற்ற இரண்டு ரன் முன்னிலையின் அடிப்படையில் கேரளா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.