மும்பை : தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி ட்ராபி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான முறையில் ஆட்டமிழந்தார். வெறும் 8 ரன்களில் 3 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் குறைவான ரன்கள் எடுத்தார் என்பதை விட அவரது பலவீனத்தை தமிழ்நாடு அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் சாரியார் சரியாக பயன்படுத்தினார். அது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம் பெற்று 2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற போதும், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போதும், அதைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் ஷார்ட் லென்த்தில் வீசப்பட்ட பந்துகளை சந்திக்க திணறினார். அந்த பந்துகளை அடித்து ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்து வந்தார். அதற்காக அவருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்ட போதும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தான் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அவரை ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடுமாறு இந்திய அணி நிர்வாகம் கூறியும் அவர் அதை செய்யவில்லை. தற்போது அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதன் பின்னரே அவர் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்க முடிவு செய்தார்.
தமிழ்நாடு அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் மும்பை அணி சார்பில் களமிறங்கினார் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் வந்த உடன் தமிழ்நாடு அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் வாரியார் அவரின் பலவீனமான ஷார்ட் பந்தை வீசினார். அதை எதிர்பாராத ஸ்ரேயாஸ் ஐயர் தடுமாறி பந்தை அடிக்காமல் விட்டார்.
அதன் பின்னரும் அவருக்கு ஷார்ட் பந்துகள் வீசப்பட்ட நிலையில் 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து பவுல்டு அவுட் ஆகி வெளியேறினார் ஸ்ரேயாஸ் ஐயர். அவருக்கு இது போன்ற பலவீனம் இருப்பதை கண்டறிந்தே அவரை உள்ளூர் தொடரில் ஆடுமாறு கூறி இருந்தது இந்திய அணி நிர்வாகம். அவர்கள் பேச்சை கேட்காமல் தாமாக ஐபிஎல் தொடருக்கு தயாரான ஸ்ரேயாஸ் ஐயரின் பலவீனத்தை தமிழ்நாடு அணி வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.