மும்பை: 2024-25 ரஞ்சி டிராபி தொடரில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்று இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அம்பயருடன் வாக்குவாதம் செய்தது ரசிகர்களின் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது.
இந்த போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்று இருந்த நட்சத்திர வீரர்கள் ஆன ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே ஆகியோர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 16 பந்துகளில் 17 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் அவுட் ஆனதாக அம்பயர் அறிவித்த பிறகும் ஆடுகளத்தை விட்டு வெளியேற மறுத்தார். ஜம்மு காஷ்மீர் அணியின் ஆகிப் நபி வீசிய பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் எட்ஜ் செய்து இருந்தார். அதை ஜம்மு காஷ்மீர் அணியின் விக்கெட் கீப்பர் கன்ஹையா வாதவான் கேட்ச் பிடித்து இருந்தார்.
அதற்கு உடனடியாக அவுட் கொடுத்தார் அம்பயர். ஆனால், விக்கெட் கீப்பர் பந்து பிட்ச்சான பின் கேட்ச் பிடித்துள்ளதாக ஸ்ரேயாஸ் ஐயர் அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அப்போது மறுமுனையில் இருந்த கேப்டன் அஜின்கியா ரஹானேவும் அவருக்கு ஆதரவு அளித்து அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். ஆனால், அம்பயர் கடைசி வரை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. அதை ஒப்புக்கொள்ளாமல் அம்பயருடன் வாக்குவாதம் செய்வது வேடிக்கையாக உள்ளதாக அவர்கள் விமர்சித்து உள்ளனர்.
மேலும், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை இந்திய டெஸ்ட் அணியில் எப்போதும் தேர்வு செய்யக் கூடாது எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.