மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களின் ஒருவராக ஸ்ரேயாஸ் ஐயர் விளங்கினார். ஆனால் ஸ்ரேயாஸ் கடந்த சில மாதங்களாக சரியாக விளையாடவில்லை. மற்றும் உடல் தகுதியில் பிரச்சினை இருப்பதாக கூறி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
கே எல் ராகுல், சர்பராஸ்கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டாலும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார்.

துலீப் கோப்பை, இரானி கோப்பை உள்ளிட்ட தொடர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. துலீப் கோப்பை தொடரில் இரண்டு அரை சதமும் இராணி கோப்பையில் ஒரு அரை சதமும் அடித்து இருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாலுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் அபாரமாக விளையாடி வருகிறார். முன்னதாக மகாராஷ்டிரா அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் அபாரமாக விளையாடி 142 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் கேப்டன் ரகானே கோல்டன் டக் ஆக இளம் வீரஎ ஆங்கரிஸ் ரகுவான்சி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எட்டு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
மறுமுனையில் சித்தார்த் லாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.எனினும் மும்பை அணியின் ஸ்டார் வீரரான ஸ்ரேயாஸ், இன்று அதிரடியை காட்டினார். 91 பந்துகளில் சதம் விளாசிய அவர் தொடர்ந்து அபாரமாக விளையாடி முதல் நாள் ஆட்டம் முடிவில் 164 பந்துகளில் 152 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 18 பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் என ஸ்ட்ரைக் ரேட் 92 என்ற அளவில் இருக்கிறது.
இதன் மூலம் மும்பை அணி முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் அடித்திருக்கிறது.இதன் மூலம் ஸ்ரேயாஸ், ரஞ்சிப் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் தற்போது தடுமாறி வரும் நிலையில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் பார்ம்க்கு திரும்பிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்திய அணிக்கு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.