மும்பை: ரஞ்சி டிராபி தொடரில் ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 201 பந்துகளில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்துள்ள 3வது இரட்டை சதம் என்பதால், ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், அதன்பின் ஃபார்மை மீட்டெடுக்க நீண்ட காலமாக போராடி வந்தார். ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், ரெட் பால் கிரிக்கெட்டில் பெரிதாக ரன்களை சேர்க்க முடியவில்லை. துலீப் டிராபி, இராணி கோப்பை என்று தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இந்தியா ஏ அணியிலும் கூட ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வந்தார். மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி கம்பேக் கொடுத்தாலும், இந்திய அணியில் விளையாட அதுமட்டுமே போதுமானதாக அமையவில்லை.
தொடர்ந்து திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் மும்பை அணியின் பிளேயிங் லெவனில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்தார். முதல் நாளிலேயே சதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர், முதல் நாள் ஆட்டம் முடிவில் 152 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் தொடங்கிய போதே, ஸ்ரேயாஸ் ஐயரால் இரட்டை சதம் விளாச முடியுமா என்ற கேள்வி எழுந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 201 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டி அசத்தினார். இதன் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மறுமுனையில் விளையாடி வரும் சித்தேஷ் லேட்-ம் அபாரமாக விளையாடி 150 ரன்களை கடந்துள்ளார். இவர்களின் பார்ட்னர்ஷிப் 350 ரன்களை கடந்திருப்பதால், மும்பை அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 500 ரன்களை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக கேகேஆர் அணியால் ரீடெய்ன் செய்யப்படவில்லை என்று ரசிகர்களால் ஸ்ரேயாஸ் ஐயர் கிண்டல் செய்யப்பட்டு வந்தார்.
தற்போது ரஞ்சி டிராபியில் ஃபார்மை நிரூபித்துள்ளதால், விரைவில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை கூறப்பட்டு வருகிறது.