பெங்களூர்: இந்திய அணியின் கேப்டன் பதவி மட்டுமல்ல, அவருக்கு உள்ளூர் அணியின் கேப்டன் பதவி கூட கொடுக்கக் கூடாது என இளம் வீரர் சுப்மன் கில்லை விமர்சித்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார் சுப்மன் கில்.
அவர் அடுத்த இந்திய அணியின் கேப்டன் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அவர் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக எந்த சாதனையும் செய்யவில்லை. அதிக வெற்றிகளையும் பெற்றுத் தரவில்லை.

மேலும், தற்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக ரஞ்சி டிராபி தொடரில் சொதப்பி இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி ஆடியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணி வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சுப்மன் கில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக ரமண்தீப் சிங் 16 ரன்கள் சேர்த்து இருந்தார். பஞ்சாப் அணி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் அந்த ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், அடுத்து ஆடிய கர்நாடகா அணி 475 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணியை மிரள வைத்தது.
கர்நாடகா அணியின் ஸ்மரன் ரவிச்சந்திரன் 203 ரன்கள் சேர்த்து இருந்தார். மேலும், ஒன்பதாம் வரிசை பேட்ஸ்மேன் வரை அனைவரும் சராசரியாக 20, 30 ரன்கள் சேர்த்தனர். கர்நாடகா அணியின் ரன் குவிப்பை பஞ்சாப் அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த வகையில் கேப்டனாக சுப்மன் கில்லின் செயல்பாடு ஏமாற்றம் அளித்தது.
கர்நாடகா பேட்ஸ்மேன்கள் மிக எளிதாக ரன் சேர்த்தனர். ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை விட்டு கொடுத்து இருந்தது பஞ்சாப் அணி. அந்த அணியின் ஃபீல்டிங் வியூகமும் மோசமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணி 420 ரன்கள் பின் தங்கியது.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பஞ்சாப் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்து இருந்தது. சுப்மன் கில் 7 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருக்கிறார். இந்தப் போட்டியில் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்றால் பஞ்சாப் அணி மீதமுள்ள இரண்டு நாட்களும் தாக்குப் பிடித்து பேட்டிங் செய்ய வேண்டும். அதிக ரன்கள் சேர்க்க வேண்டும். அப்படி பார்த்தாலும் இந்த போட்டியில் பஞ்சாப் அணியால் வெற்றி பெற முடியாது. அந்த வகையில் சுப்மன் கில்லின் கேப்டன்சியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.