கோவை: ரஞ்சி டிராபி தொடரில் செளராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய செளராஷ்டிரா அணி, 2வது இன்னிங்ஸில் 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் வலிமையான செளராஷ்டிரா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி கோவை மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் செளராஷ்டிரா அணி கேப்டன் ஜெயதேவ் உனாத்கட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தமிழ்நாடு அணியின் முகமது பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் செளராஷ்டிரா பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டை போல் சரிந்தனர். வசவாடா மட்டும் கடைசி வரை களத்தில் நின்று 149 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க மற்ற எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் முதல் இன்னிங்ஸில் செளராஷ்டிரா அணி 203 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியை கொடுத்தது.
தமிழ்நாடு அணி தரப்பில் முகமது, சோனு யாதவ் மற்றும் சாய் கிஷோர் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சன் - ஜெகதீசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்த நிலையில், சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 82 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடி சதமடித்த ஜெகதீசன் 100 ரன்களிலேயே ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 367 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக முதல் இன்னிங்ஸிலேயே தமிழ்நாடு அணி 164 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை செளராஷ்டிரா அணி தொடங்கியது.
ஹர்விக் தேசாய் - சிராஜ் ஜானி தொடக்கம் கொடுத்தனர். அப்போது சோனு யாதவ் பவுலிங்கில் ஹர்விக் தேசாய் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் குர்ஜப்னீத் சிங் வேகத்தில் சிராக் ஜானி 3 ரன்களிலும், புஜாரா டக் அவுட்டாகியும், ராணா 6 ரன்களிலும், மன்கட் 1 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் செளராஷ்டிரா அணி 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 3வது நாள் ஆட்ட நேரம் முடிவில் செளராஷ்டிரா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 35 ரன்களுடன் களத்தில் உள்ளது. இதன் காரணமாக நாளைய ஆட்டத்தின் முதல் செஷனிலேயே செளராஷ்டிரா அணியின் எஞ்சியுள்ள 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தமிழ்நாடு அணி அசத்தல் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.