ஹைதராபாத் : ஹைதராபாத் அணி வீரர் தன்மய் அகர்வால் ரஞ்சி போட்டியில் வரலாற்று சாதனைகளை படைத்தார். அவர் முச்சதம் (ட்ரிபிள் செஞ்சுரி) அடித்து எதிரணியான அருணாச்சல பிரதேசத்தை தெறிக்கவிட்டார். பல ஆண்டுகளாக உடைக்க முடியாத அதிவேக இரட்டை சதம் மற்றும் அதிவேக முச்சதம் சாதனைகளை உடைத்து எறிந்தார்.
இந்தியாவில் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபி தொடர் நடந்து வருகிறது. அதில் ஹைதராபாத் - அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேசம் அணி 172 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அந்த அணி பேட்டிங் செய்து முடித்த உடன் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் தன்மய் அகர்வால் மற்றும் கேப்டன் ராகுல் சிங் களமிறங்கினர்.

இருவரும் சேர்ந்து கத்துக்குட்டி அணியான அருணாச்சல பிரதேசத்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் ரன் எடுக்க வேண்டும் என முடிவு செய்து அவர்கள் ஆடினர். ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால், தன்மய் அகர்வால் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.
அவர் ஃபோர், சிக்ஸ் என பவுண்டரி மழை பொழிந்ததோடு 119 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார். அதன் மூலம் முதல் தர கிரிக்கெட் (உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை சேர்த்து) வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்து தன் அதிரடியை தொடர்ந்த அவர் 147 பந்துகளில் முச்சதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 160 பந்துகளில் 323 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். கடந்த 2017இல் தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ மாராய்ஸ் 191 பந்துகளில் முச்சதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதை உடைத்தார் தன்மய் அகர்வால். மேலும், ஒரே நாளில் 300 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர், இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
அவர் தனது ஆட்டத்தில் 33 ஃபோர், 21 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் 21 சிக்ஸ் அடித்ததன் மூலம் இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக இஷான் கிஷன் 14 சிக்ஸ் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை தன்மய் அகர்வால் உடைத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஹைதராபாத் அணி 48 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் குவித்து இருந்தது.
அதற்கு முன் அருணாச்சல பிரதேசம் 172 ரன்கள் குவித்த நிலையில், ஒரே நாளில் 701 ரன்கள் குவிக்கப்பட்டு இருந்தது. முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் 700 ரன்களுக்கும் மேல் குவிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக 1948இல் ஆஸ்திரேலியன்ஸ் - எசக்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் ஒரே நாளில் 721 ரன்கள் குவிக்கப்பட்டு இருந்தது.