டெல்லி: சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாட இருக்கிறார். அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வர உள்ளனர். அவர்களை சமாளிக்க காவல்துறை உதவியை நாடி இருக்கிறது டிடிசிஏ அமைப்பு.
தற்போது நடைபெற்று வரும் 2024 - 25 ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி மாநில அணிக்காக விராட் கோலி விளையாட இருக்கிறார். ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டி டிசம்பர் 30 அன்று துவங்க உள்ள நிலையில் அந்தப் போட்டியில் விராட் கோலி டெல்லி மாநில அணியில் இடம் பெற்று விளையாட இருக்கிறார்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. விராட் கோலியை பார்ப்பதற்கு என்றே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பான டிடிசிஏ-வின் செயலாளர் அசோக் சர்மா டெல்லி காவல் துறைக்கு கடிதம் எழுத உள்ளதாக கூறி இருக்கிறார்.
தாங்கள் தனிப்பட்ட முறையில் தனியார் நிறுவன பாதுகாவலர்களை நியமித்து இருப்பதாகவும், அதே சமயம் ரசிகர்களுக்கு அதிக தொந்தரவு இல்லாத வகையில் இந்த போட்டியை நடத்தி முடிக்க காவல் துறையினரின் உதவி கோரப்படும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
விராட் கோலி விளையாடும் போட்டி என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அருண் ஜெட்லி மைதானத்தின் 7, 16 மற்றும் 15 ஆகிய மூன்று வாயில்கள் திறக்கப்பட உள்ளன. விராட் கோலியை பார்க்க விரும்பும் ரசிகர்கள் இந்த போட்டியை நேரில் வந்து காணலாம்.
சுமார் 8000 முதல் 10,000 ரசிகர்கள் வரை நேரில் வர வாய்ப்பு உள்ளதாக டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பு எதிர்பார்த்து அதற்கான திட்டமிடல்களையும் செய்து வருகிறது. இதற்கு முன் மும்பையில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் ரோஹித் சர்மா விளையாடினார். அப்போது அவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்தனர்.
ரோஹித் சர்மா மைதானத்தை விட்டு வெளியேறிய போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரது காரை வழிமறித்து நின்றனர். அதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.