புதுச்சேரி : பாண்டிச்சேரியை அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கவுரவ் யாதவ் டெல்லி அணியின் 10 விக்கெட்களை வீழ்த்தி கதி கலங்க வைத்தார். வலுவான அணிகளில் ஒன்றாக கருதப்படும் டெல்லி அணியை வலு குறைந்த பாண்டிச்சேரி அணி வீழ்த்தியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
மத்திய பிரதேசத்தின் குக்கிராமமான பிசோனி கலானை சேர்ந்தவர் கவுரவ் யாதவ். 21 வயதில் தன் தந்தையிடம், "நான் கிரிக்கெட் விளையாடப் போகிறேன். ஒருவேளை கிரிக்கெட்டில் தோற்று விட்டால் நம் தோட்டத்தில் விவசாய வேலைகளை பார்க்கிறேன்" என சொல்லி விட்டு வந்தவர். அவர் தான் இப்போது பாண்டிச்சேரி அணிக்காக வேகப் பந்துவீச்சாளராக, டெல்லி அணியை வீழ்த்தி இருக்கிறார்.

இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் நான்கு நாள் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் பாண்டிச்சேரி - டெல்லி அணிகள் இடையிலான போட்டியில் கவுரவ் யாதவ் முதல் இன்னிங்க்ஸில் 7 விக்கெட்டும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். டெல்லி அணி முதல் இன்னிங்க்ஸில் 148 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 145 ரன்களும் மட்டுமே எடுத்தது. பாண்டிச்சேரி அணி இந்தப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் கவுரவ் யாதவ் பெயர் பிரபலமாக மாறி உள்ளது. அவர் மத்திய பிரதேச மாநில அணியில் கடந்த பத்து ஆண்டுகளாக இடம் பெற்று வந்தவர் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் 30 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். அதுவும் நன்கு நாள் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வர வேகப் பந்துவீச்சாளராக இடம் பெற்று வந்தார். உள்ளூர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடைசியாக 2021 - 22 ரஞ்சி தொடரில் 23 விக்கெட்கள் வீழ்த்தி அந்த ஆண்டு ரஞ்சியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், அதன் பின் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் தான் அவருக்கு பாண்டிச்சேரி அணியில் வேகப் பந்துவீச்சாளர் தேவை உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து தன் மாநிலத்தை மாற்றிக் கொண்டு பாண்டிச்சேரி அணிக்காக ஆடத் துவங்கி இருக்கிறார் கவுரவ் யாதவ். அணியில் இடம் பெற்ற முதல் போட்டியிலேயே 10 விக்கெட் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார் கவுரவ் யாதவ்.