டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் தோனி தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்ததார். பல இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பே கிடைக்காமல் போனது. அதையும் மீறி இந்திய அணியில் தன்னுடைய விக்கெட் கீப்பிங் திறமையால் மட்டும் 40 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் தான் சாஹா.
56 சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 1353 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம், 6 அரை சதம் அடங்கும். அது மட்டுமில்லாமல் ஒன்பது சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள சாஹா மொத்தமாக 41 விக்கெட் தான் வீழ்த்திருக்கிறார்.

சாகா டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கில் 92 கேட்சுக்களும், 12 ஸ்ட்ம்பிங்கும் செய்து இருக்கிறார். இந்த நிலையில் கடைசியாக சாஹா, இந்திய அணிக்காக விளையாடி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த சூழலில் 40 வயதான சாஹா, தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணியில் தாம் இடம்பெறாதது குறித்து சாஹா மௌனத்தை கலைத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர்," எனக்கு நிகழ்ந்தது அநீதி என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி சொல்லி இருந்தால் நான் சுயநலம் மிக்க நபர் என்று ஆகிவிடும். ஏனென்றால் என்னை தேர்வு செய்ய வேண்டும் என்பது ஒரு நபர் எடுக்கும் முடிவு கிடையாது".
"ஒருவேளை நான் தகுதி வாய்ந்த நபராக இருந்திருக்க மாட்டேன். இல்லையென்றால் தேர்வுக்குழு எதிர்பார்த்த விஷயங்களை நான் செய்யாமல் இருந்திருப்பேன். எனவே அதற்கான முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம். நான் இன்னும் நன்றாக செயல்பட்டு இருந்தால், என்னை நிச்சயம் அணியில் சேர்த்து இருப்பார்கள்".
"எனவே அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. என் வாழ்க்கையில் என்ன நல்ல விஷயங்கள் நடக்கின்றதோ, அதை மட்டும் எடுத்துக் கொள்ளும் பழக்கம் என்னிடம் இருக்கின்றது. நான் அணியில் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் கேட்ச்கள் மூலமாகவோ, பேட்டிங் மூலமாகவோ அணியின் வெற்றிக்கு பங்காற்றி இருப்பேன். இதையேதான் பெங்கால் அணிக்காக நான் செய்து வருகின்றேன்".
"நான் ஸ்லீப்பில் பில்டிங் செய்தால் கூட இதுவரை ஒரு கேட்சை நான் மிஸ் செய்தது கிடையாது. நான் விளையாடிய ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். நான் ஆரம்பத்தில் இருந்து இப்படி தான். எப்போதுமே எந்த ஒரு நெருக்கடியும் மண்டைக்குள் போட்டுக் கொள்ள மாட்டேன். மேலும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டேன்".
"நான் களத்தில் எப்போதுமே அமைதியான வீரராக இருக்க முயற்சி செய்வேன். இதுதான் எனக்கு திருப்தி தருகின்றது. நான் எப்போதுமே உணர்ச்சி வசப்படும் நபர் கிடையாது. குழந்தையிலிருந்து இப்படித்தான். இதனால் கடைசி மேட்சை விளையாடுகிறேன் என்ற எந்த ஒரு சென்டிமேட் எனக்கு இல்லை. நான் இனி எப்போதும் என் நண்பர்களுடன் வெளியே செல்வேன்" என்று சாஹா கூறியுள்ளார்.