"புலி" மாதிரி ஆடி குஜராத் "சிங்கத்தை" வேட்டையாடிய யுவராஜ் சிங்!
மொஹாலி: குஜராத் அணியுடனான ரஞ்சிப் போட்டியில், பஞ்சாப் வீரர் யுவராஜ் சிங், அதிரடியாக விளையாடி 187 ரன்களைக் குவித்து அணிக்கு, முக்கியமான முதல் இன்னிங்ஸ் லீடைப் பெற்றுக் கொடுத்தார்.
மேலும் தனது அதி வேக ஆட்டத்தின் மூலம் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ள யுவராஜ், தனது விமர்சகர்களுக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

தனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மறைந்து கிடக்கிறது என்பதை அவரது அதி வேக ஆட்டம் நிரூப்பதாக அமைந்தது. யுவராஜ் சிங்கின் அபார ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் லீட் பெற்றுள்ளது.
பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான ரஞ்சிப் போட்டியின் 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய குஜராத் 467 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய பஞ்சாப், யுவராஜின் அபார ஆட்டம் காரணமாக 608 ரன்களைக் குவித்தது.
யுவராஜ் சிங்கின் ஸ்கோரில் 14 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடக்கமாகும். மொத்தம் 233 பந்துகளைச் சந்தித்து அவர் 187 ரன்களைக் குவித்தார்.
இது யுவராஜ் சிங்கின் 24வது முதல் தர சதமாகும். கடந்த சீசனில் யுவராஜ் சிங் அடுத்தடுத்து 3 சதங்களைப் போட்டு கலக்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
யுவராஜ் சிங்குக்கு தற்போது இந்திய அணியில் இடம் இல்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் அவர் இந்திய அணியில் விளையாடினார். அதன் பின்னர் தொடர்ந்து அவர் ஓரம் கட்டப்பட்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை 16 கோடிக்கு விலை கொடுத்து வாங்கியும் அந்த அணிக்கு பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications