
நட்சத்திர ஹோட்டல்
இன்று நடைபெற உள்ள டி20 போட்டிக்காக இந்திய வீரர்கள் தயாராகி வந்தார்கள். இதற்காக ஹராரேயிலுள்ள மெய்க்லஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பல நிர்வாகிகள்
இந்திய வீரர்களுடன், ஸ்பான்சர் நிறுவன அதிகாரிகள், உதவி அதிகாரிகள் என பல தரப்பட்டவர்களும் அதே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் புகார்
இந்நிலையில், ஜிம்பாப்வே பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின்பேரில் இந்த ஹோட்டலில் இருந்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ள தகவல் நேற்று மதியம் இந்திய ஊடகங்களுக்கு கிடைத்தது.

கிரிக்கெட் வீரர்
வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் என்பதால் கைது செய்யப்பட்டது அணி வீரர்களில் யாராவது ஒருவராகத்தான் இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில், கிரிக்கெட் வீர்ர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வேகமாக பரவின.
இருப்பினும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் அந்த தகவல் மறுக்கப்பட்டு வந்தது.

பெயர் விவரம்
இந்நிலையில், பாலியல் வழக்கில் கைதானவர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஐடிடபிள்யூ நிறுவனத்தின் துணை கம்பெனியான ஐடீம்வொர்க்சின், கன்சல்டன்ட் சத்யநாராயணன் மற்றும், ஜாம்பியா தொழிலதிபர் ராஜ்குமார் கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியர்கள்
கைதான இருவரும் இந்தியர்கள் என்பதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வீண் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதன்முதலில் இந்த வதந்தி தகவலை வெளியிட்டது ஜிம்பாப்வேயை சேர்ந்த ஒரு செய்தி இணையதளம்தான். இது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்களை உலுக்கிய புகார்
"எங்கள் வீடுகளில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விவரம் கேட்க ஆரம்பித்துவிட்டனர். வெட்கக்கேடாக போய்விட்டது" என்று கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஜிம்பாப்வேயிலுள்ள இந்திய ஊடக நிருபர்களிடம் கிசுகிசுத்தனர்.

உதவி செய்ய தயார்
ஐடீம்வொர்க்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தகவல் அறிந்து தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், விசாரணைக்கு தேவைப்படும் உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











