ஷார்ஜா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரஷித் கான் தற்போது சார்ஜாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார். ஆசியக் கோப்பைத் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு தயாராகும் விதமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் பங்கு பெற்ற முத்திரப்புத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்தினர்.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 143 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த நிலையில் 26 வயதான ரசீத் கானின் சகோதரர் ஹாஜி அப்துல் கரீம், கடந்த வாரம் உயிரிழந்தார்.
அண்ணன் மறைந்த துக்கத்தில் இருந்து மீளாத ரஷித் கான் நாட்டுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்துவிட்டார். இதனால் பலரும் ரசித் கானை சந்தித்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று ரஷீத் கானை பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சாகின் ஆப்ரிடியை கட்டி அணைத்து தன்னுடைய இரங்கலை தெரிவித்தார். அண்டை நாடாக இருந்தாலும் இரு அணி ரசிகர்களுக்கும் இடையே அவ்வளவு மோதல் வரும். ஆனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்த துயர சம்பவத்தில் ஒன்றாக நின்றது இரு அணி ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இப்ராஹீம் சாத்ரான், "ரஷித் கானின் அண்ணன் அப்துல் கரீம் வெறும் மூத்த அண்ணனாக இல்லாமல் அந்த குடும்பத்திற்கு ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்தார். அவருக்கு எங்கள் அணி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்" என்று கூறியிருந்தார். இதேபோன்று ஆப்கானிஸ்தான் வீரர் ஆப்கார் ஆப்கான், "ரஷித் கானின் மூத்த சகோதரர் உயிரிழந்தது நினைத்து நாங்கள் வருத்தம் அடைகின்றோம். அவருக்கு இறைவன் சொர்க்கத்தில் உயரிய இடத்தை தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.