கொல்கத்தா: தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், உலகின் மிகச் சிறந்த டி20 பந்துவீச்சாளரான ரஷித் கான், அவரைப் பார்த்து இந்திய பிட்ச்களில் எப்படி பந்து வீச வேண்டும் என கற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பாராட்டு சாய் கிஷோரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது.
2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் கிஷோர் இடம் பெற்றுள்ளார். ரஷித் கான் ஏற்கனவே அந்த அணியில் இருக்கும் நிலையில், சாய் கிஷோருக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், ரஷித் கானை விட சாய் கிஷோர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சாய் கிஷோர் 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவர் 12 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 16.3 என்பதாகவும், எகானமி 8.2 என்பதாகவும் உள்ளது.
மறுபுறம், ஜாம்பவான் ஆன ரஷித் கானின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் 8 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 46.3 என்பதாகவும், எகானமி 9.26 என்பதாகவும் உள்ளது.
கடந்த ஏழு போட்டிகளில் மிக மோசமாகச் செயல்பட்டு வந்த ரஷித் கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். அந்தப் போட்டியில் அவர் சுனில் நரேன் மற்றும் ஆண்ட்ரே ரசல் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், நான்கு ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய நிலையில் அவர் சாய் கிஷோரை பாராட்டி இருக்கிறார். சாய் கிஷோர் குறித்து ரஷித் கான் பேசுகையில், "சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம். அவரிடம் நான் பிட்சுகளை மட்டும் நம்பி நாம் விளையாட முடியாது, பிட்சில் சரியான இடத்தில் நாம் பந்தை பிட்ச்செய்து வீச வேண்டும் என்று சொன்னேன். அவர் பந்துவீசும் விதம் மற்றும் பந்துவீச்சு மாறுபாடுகளை நான் விரும்புகிறேன்."
"அவரிடம் இருந்து அவற்றை கற்றுக் கொள்கிறேன். நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன். என்னுடைய அனுபவத்தை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதேபோல, இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் நான் பெற்றுக் கொண்டேன்" என்று கூறி இருக்கிறார் ரஷித் கான்.