திருவனந்தபுரம்: ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ரஷீத் கான் கேரளா ரசிகர்களுடன் மலையாளத்தில் உரையாடிய வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
2018ஆம் ஆண்டுக்கு முன் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சாதாரண வீரர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடும் சாம்பியன் அணிக்கு தலைமை தாங்குவார் என்று யாராவது சொல்லியிருந்தால், அனைவரும் சிரித்திருப்போம். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடிய சில ஆண்டுகளில் குஜராத் அணிக்கு தலைமை தாங்கி சாதித்திருக்கிறார் ரஷீத் கான்.

டி20 லீக் கிரிக்கெட்டில் சூப்பர்ஸ்டார் வீரர்கள் என்று சிலரை மட்டுமே சொல்ல முடியும். டுவைன் பிராவோ, பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன், சுனில் நரைன் உள்ளிட்டோரை சொல்லலாம். அந்த வகையில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்து சர்வதேச கிரிக்கெட் லீக்கில் உச்ச வீரராக வளர்ந்திருக்கிறார் ரஷீத் கான். கடந்த 5 ஆண்டுகளில் ரஷீத் கான் விளையாடாத டி20 லீக் தொடரே கிடையாது என்ற நிலை உருவாகியது.
அந்த அளவிற்கு செல்லும் இடமெல்லாம் விக்கெட்டுகள், ரன்கள் என்று வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிறிய வயதிலேயே டி20 லீக்களில் 500க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ரஷீத் கான் தான். இவரை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கிரிக்கெட் பக்கம் திரும்பினார்கள்.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளில் விளையாடுவதற்காக திருவனந்தபுரத்தில் முகாமிட்டது. கடந்த 29ஆம் தேதி நடக்கவிருந்த ஆஃப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையிலான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனிடையே மைதானத்தில் குவிந்திருந்த கேரள ரசிகர்களை ஆஃப்கான் வீரர் ரஷீத் கான் சந்தித்தார்.
அப்போது கேரள ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ரஷீத் கான், அவர்களிடம் மலையாளம் பேசுவதற்கும் கற்றுக் கொண்டார். எப்படி இருக்கிறீர்கள்? என்று மலையாளத்தில் எப்படி சொல்வது என்று ரஷீத் கான் கேட்க, அதற்கு ரசிகர்கள் ஒன்றாக மலையாளம் கற்றுக் கொடுத்தனர். அதனை கேட்டு அப்படியே மலையாளத்தில் ரஷீத் கான் பேச, ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாகினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.