2வது ஒருநாள் ஆட்டம்
2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் இந்திய அணி தப்பிக்கும் என்பதால் பதிலடி கொடுப்பதற்கு முணைப்பு காட்டி வருகிறது. கடந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங் படை சிறப்பாக ஆடி 306 ரன்களை குவித்தது. ஆனால் பவுலிங்கில் சொதப்பியதால் தான் டாம் லாதம் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் 221 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ரவி சாஸ்திரி அட்வைஸ்
இந்நிலையில் இந்தியாவுக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய யோசனை கூறியுள்ளார். நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் வெகு சீக்கிரமாகவே அவுட்டாகினர். அறிமுக வீரர் உம்ரான் மாலிக் 2 விக்கெட்களை கைப்பற்றினார். அதன்பின் வந்த டாம் லாதம் முதல் சில ஓவர்களுக்கு தடுமாறி வந்தார். எனினும் அதன்பின்னர் அனைத்தையும் சமாளித்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதற்கு காரணம் என்ன 6வது பவுலர் இல்லாதது தான்.
அவர் வேண்டும்?
போட்டியை திரும்பி பாருங்கள், இந்திய அணியில் 6வது பவுலிங் ஆப்ஷன் ஏதாவது உள்ளதா? 3 பவுலர்கள் பெஞ்சில் அமர்ந்துள்ளனர். எனவே அடுத்த போட்டியில் தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வந்தால் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்குமே பலமாக இருக்கும். அதனை யோசனை செய்து பார்க்க வேண்டும் என ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.
மீண்டும் ஒரு குழப்பம்
இந்திய அணியில் தீபக் ஹூடாவை சேர்க்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு பேட்ஸ்மேனை நீக்கி ஆக வேண்டும். அதன்படி பார்த்தால் மீண்டும் சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரை நீக்குவது என்ற குழப்பம் மீண்டும் எழுந்துள்ளது.