மும்பை : இந்தியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் படு தோல்வி அடைந்தது. அப்போது தோல்வியை ஒப்புக் கொள்ளாத ரவி சாஸ்திரி முதிர்ச்சியற்ற பேச்சுக்களை பேசி வந்தார்.
அது ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடையே கடும் விமர்சனத்தை எழுப்பியது. பலரும் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு சரியானவர் இல்லை. அவரை நீக்க வேண்டும் என கூறி வந்தனர்.
அந்த வரிசையில் இணைந்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுஹான். இவர் இந்திய அணியில் 1969 முதல் 1981 வரை கிரிக்கெட் ஆடியவர்.
இவர், "ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கு முன்பு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவர் நன்றாக கமண்டரி செய்வார். அந்த வேலையை செய்ய விட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து தொடரில் இரண்டு அணிகளும் சமமாகவே இருந்தன. எனினும், இங்கிலாந்து பின்வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடினர். இந்தியா அங்கே தோற்று விட்டது என கூறி இருக்கிறார் சேத்தன் சவுஹான்.
மேலும், கோலி, ரவி சாஸ்திரி கூறுவது போல இப்போதுள்ள இந்திய அணிதான் வெளிநாடுகளில் சிறந்த அணி என்ற கூற்றையும் மறுத்துள்ளார். 80களில் இருந்த இந்திய அணிதான் சிறந்த இந்திய அணி என கூறியுள்ளார்.
ஏற்கனவே, கங்குலி, சேவாக் போன்றோர் ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறிய நிலையில், மூத்த முன்னாள் வீரரான சேத்தன் சவுஹானும் அதையே கூறி இருக்கிறார்.