டெல்லி: வங்கதேச பயணத்துக்கான இந்திய அணிக்கு இயக்குநராக ரவிசாஸ்திரி மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.
இந்திய அணி வங்கதேசத்தில் வருகிற ஜுன் 7- ந் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இப் பயணத்தில் டெஸ்ட் போட்டி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.
மேலும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் முறையாக மூத்த பயிற்சியாளர் யாரும் இல்லாமல் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என்றும் கிரிக்கெட் வாரிய இயக்குனர்கள் ஒரே எண்ணத்தில் இல்லை என்பதன் அடையாளம் இதுவாகும் என்றும் கூறப்பட்டது.

மீண்டும் ரவிசாஸ்திரி
தற்போது வங்கதேச பயணத்துக்காக இந்திய அணிக்கு இயக்குநராக ரவிசாஸ்திரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் அணுராக் தாகூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கதேசம் செல்லும் இந்திய அணிக்கு, இடைக்கால இயக்குநராக ரவிசாஸ்திரியை பி.சி.சி.ஐ. தலைவர் ஜெகன்மோகன் டால்மியா நியமனம் செய்து உள்ளார். இது வங்கதேச பயணத்திற்கானது மட்டுமே என்றார்.
பேட்டிங், பந்துவீச்சு பயிற்சியாளர்..
இந்திய கிரிக்கெட் அணிக்காக ரவிசாஸ்திரி 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் மற்றும் பாரத் அருண் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாக மானேஜர்
பீல்டிங் பயிற்சியாளராக ஆர். ஸ்ரீதர் மீண்டும் திரும்பியுள்ளார். இதற்கிடையே இந்திய அணியின் நிர்வாக மானேஜராக பிஸ்வரூப் டே நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியின் இயக்குநராக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பயணம் மற்றும் உலகக் கோப்பைப் போட்டித் தொடரின்போது சாஸ்திரி செயல்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.