லண்டன்: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் தோனிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) "ஹால் ஆஃப் ஃபேம்" விருது வழங்கி கெளரவித்துள்ளது. அந்த நிகழ்வில் தோனியைப் பாராட்டிப் பேசிய முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அவரை "பிக்பாக்கெட்" உடன் ஒப்பிட்டுப் பேசினார். இது பாராட்டா, அல்லது கிண்டலா? என தெரியாத அளவுக்கு பேசி இருக்கிறார் ரவி சாஸ்திரி.
"தோனி ஒரு பிக்பாக்கெட்டை விட வேகமான கைகளை வைத்துள்ளார். நீங்கள் இந்தியாவில் ஒரு பெரிய போட்டியைப் பார்க்கச் செல்கிறீர்கள் என்றால், குறிப்பாக அதிக கூட்டம் வரும் அகமதாபாத்திற்குச் செல்கிறீர்கள் என்றால், உங்களுக்குப் பின்னே தோனி நிற்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அப்படி நின்றால், உங்கள் பின்னே பார்த்துக் கொண்டே இருங்கள். உங்களின் பணப்பை காணாமல் போயிருக்கும்!" என்று கூறினார் ரவி சாஸ்திரி.

இதைக் கேட்டு அந்த அரங்கில் இருந்த பலரும் சிரித்தனர். மேலும், "தோனி ஜீரோ ரன்களில் அவுட் ஆகிறாரோ, உலகக் கோப்பை வெல்கிறாரோ, சதம் அல்லது இரட்டை சதம் அடிக்கிறாரோ, எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பார். எந்த வித்தியாசமும் இருக்காது" என்று கூறினார் ரவி சாஸ்திரி.
தனக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கப்பட்டது குறித்துப் பேசிய தோனி, "இது மிகப்பெரிய கெளரவம். உலகம் முழுவதிலும் இருக்கும் பல தலைமுறை கிரிக்கெட் வீரர்களையும் அங்கீகரிக்கும் ஒரு இடத்தில் எனக்கு இந்த கெளரவம் அளிக்கப்பட்டிருக்கிறது. பல காலத்தைத் தாண்டிய சிறந்த வீரர்களுடன் எனது பெயரும் இருக்கும் என்பது அற்புதமான உணர்வாக உள்ளது. இதை நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் பார்ப்பேன்" என்று கூறினார் தோனி.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2019 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அவர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளை கேப்டனாக வென்றிருக்கிறார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 17,266 ரன்களையும், விக்கெட் கீப்பராக 829 விக்கெட் வீழ்ச்சிகளையும் செய்திருக்கிறார். மொத்தம் 538 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை அவர் செய்திருக்கிறார்.