அனுஷ்கா அருகில் இருந்தாலும்.. இதயம் துடித்தது இந்தியாவுக்காகத்தானே... "செம" சாஸ்திரி!
மும்பை: அனுஷ்காவால்தான் விராத் கோஹ்லியின் ஆட்டத் திறன் பாதித்ததாக கூறுவது சரியல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
விராத் கோஹ்லி உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் சரியாக ஆடவில்லை. அதேபோல மேலும் பல முக்கியப் போட்டிகளிலும் அவர் சரிவர ஆடவில்லை.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் விராத் கோஹ்லி சரியாக ஆடாததற்கு அனுஷ்கா சர்மாவைக் குறை சொல்வது சரியல்ல என்று சாஸ்திரி கூறியுள்ளார்.

அனுஷ்காவால் தடையில்லை...
இதுகுறித்து சாஸ்திரி கூறுகையில், அனுஷ்கா அருகில் இருப்பதால் கோஹ்லியின் ஆட்டம் ஒரு போதும் தடைபட்டதில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கோஹ்லி எடுத்த 700 ரன்களில் 4 சதங்களும் அடங்கியிருக்கிறது. அவரது இதயம் எப்போதும் இந்திய வெற்றிக்காகத்தான் துடித்துக்கொண்டிருக்கிறது.

டோணியின் ஓய்வு...
டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோணி ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து பந்துவீச்சாளர்களுக்கு தொல்லை தந்து கொண்டுதான் இருப்பார்.

ஸ்டீவன் ஸ்மித்...
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எந்தவிதத்திலும் அவரிடம் பலவீனத்தை காண முடியவில்லை.

கிரிக்கெட் மூளை...
அவரது கண்ணுடன் இணைந்து கை செயல்படும் விதம் அற்புதமானது. அவரது கிரிக்கெட் மூளை எப்போதும் குறுகுறுவென செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications