
கே.எல்.ராகுலின் கம்பேக்
இந்திய அணியின் வெற்றியை விட ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது கே.எல்.ராகுலின் பேட்டிங் தான். 39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறிய போது, தனி ஆளாக போராடிய கே.எல்.ராகுல் 91 பந்துகளில் 75 ரன்களை அடித்து வெற்றிக்கு உதவினார். ஃபார்ம் அவுட்டாகி, அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ராகுல், துணைக்கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். எனினும் தற்போது அட்டகாசமான கம்பேக் தந்துள்ளார்.

ரவிசாஸ்திரி ஆலோசனை
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில், கே.எல்.ராகுலின் இந்த ஆட்டத்தால் தேர்வுக்குழுவினருக்கு 2 விஷயங்களில் தலைவலியை கொடுத்துள்ளார். முதல் விஷயம் மீதமுள்ள 2 போட்டிகள் தான். ரோகித் சர்மா அடுத்த போட்டிக்கு வந்துவிட்டால், யாரை ப்ளேயிங் 11ல் இருந்து நீக்குவது என்ற கேள்வி உள்ளது. ஆனால் ராகுல் தனது இடத்தை நன்கு உறுதி செய்துக்கொண்டார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி
2வது விஷயம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்று தான். ராகுல் இதே போல விக்கெட் கீப்பிங் செய்தால் பேட்டிங்கில் நிச்சயம் பெரிய பலம் கூடும். இங்கிலாந்தில் பொதுவாக நீண்ட தூரத்தில் நின்று தான் கீப்பிங் செய்ய வேண்டும். அதற்கு தயாராகும் வகையில் 3 ஒருநாள் போட்டிகள், ஐபிஎல் தொடர் உள்ளது. எனவே அதற்குள் கே.எல்.ராகுல் தனது இடத்தை உறுதி செய்துக்கொள்வார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ராகுலின் ரெக்கார்ட்
இங்கிலாந்தில் இதுவரை 9 டெஸ்ட்களில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 614 ரன்களை அடித்துள்ளார். அதுவும் இறுதிப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்தை அடித்துள்ளார். ரிஷப் பண்ட் இல்லாத நேரத்தில் விக்கெட் கீப்பிங் செய்த கே.எஸ்.பரத் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. 4 போட்டிகளில் 101 ரன்களை மட்டுமே அடித்தார். எனவே கே.எல்.ராகுல் தான் ஒரே தேர்வாக இருப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications