மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளராக தொடரப் போவதில்லை என்பதை ஏறக்குறைய உறுதிப்படுத்தும் விதமாக வார்த்தைகளை விட்டிருக்கிறார் ரவி சாஸ்திரி.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2017ம் ஆண்டு ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2019ம் ஆண்டு அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்த சூழலில் அவரின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அடுத்த முறையும் அவர் தான் பயிற்சியாளராக இருப்பார் என கூறப்பட்டது. எனினும், அதற்கு ரசிகர்கள் மத்தியிலும், சில பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு நிலவியது.

காரணம், ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. 2019ல் நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடமும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மீண்டும் அதே நியூஸிலாந்திடமும் இந்திய அணி தோற்றது. இதனால், ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பிலும் அதிருப்தியை நிலவியது. இதற்கிடையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு தான் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இந்த பரபரப்பான சூழலில், முதன் முறையாக தனது பதவி விலகல் குறித்து ரவி சாஸ்திரி வாய் திறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் The Guardian-க்கு அளித்துள்ள பேட்டியில், "எனது பதவிக் காலத்தில் ஐந்து ஆண்டுகள்டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்.1 இடத்தில் இருந்துள்ளோம். ஆஸ்திரேலிய மண்ணில் இரு முறை அடுத்தடுத்து டெஸ்ட் தொடரை வென்றுள்ளோம். இங்கிலாந்தில் இம்முறை வெற்றிப் பெற்றிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை இந்த கொரோனா காலத்தில், ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்தையும் அவர்கள் மண்ணில் வைத்து வீழ்த்தியது பெரிய விஷயம்.
அதேபோல், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளையும் அவர்கள் மண்ணில் வைத்தே வீழ்த்தியிருக்கிறோம். எதிர்வரும் டி20 உலகக் கோப்பையை நாங்கள் வென்றால், அது கேக் மீது ஐஸ் வைத்தது போன்று இருக்கும். அதற்கு மேல் எதுவும் இல்லை. நான் ஒன்றை எப்போதும் நம்புகிறேன். வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதற்காக, எந்த இடத்திலும் நீங்கள் அதிக நாட்களுக்கு தங்கிவிடக் கூடாது. நான் இந்திய அணிக்காக தேவைக்கு அதிகமாகவே சாதித்திருக்கிறேன். இந்த கோவிட் காலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை அவர்கள் மண்ணில் வீழ்த்தியதே, என் நான்கு தசாப்த கிரிக்கெட் வாழ்வின் திருப்திகரமான தருணமாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், "கோவிட் இருக்கிறதோ இல்லையோ.. ரசிகர்களை பொறுத்தவரை வெற்றிப் பெற வேண்டும். அவ்வளவுதான். அவர்கள் வேறு எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. நீங்கள் வெற்றி பெற வேண்டும், ரன்கள் எடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இந்தியாவின் பயிற்சியாளராக இருப்பது பிரேசில் அல்லது இங்கிலாந்தின் கால்பந்து பயிற்சியாளராக இருப்பது போன்றது. உங்களை நோக்கி எப்போது துப்பாக்கி இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஆறு மாதம் மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி இருப்பீர்கள். ஆனால், ஒருமுறை நீங்கள் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானால் போதும்.. தோட்டா உங்கள் மீது பாய்ந்துவிடும். பின்னர் நீங்கள் உடனடியாக வெற்றிப் பெற்றே ஆக வேண்டும். இல்லையெனில், அவர்கள் உங்களுக்குள் காலி செய்துவிடுவார்கள்" என்று விரக்தி பொங்க ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.