பாதுல்லா: இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும் கூட இந்திய அணியினரின் சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டும் வகையில் இந்திய அணியின் இயக்குநரான ரவி சாஸ்திரி, வீரர்களுக்கு டின்னர் கொடுத்துக் கவுரவித்தார்.
மொத்த அணியினருக்கும் சாஸ்திரி டாக்காவில் விருந்தளித்தாராம்.

மழையால் இந்தப் போட்டி மகா மோசமாக பாதிக்கப்பட்டது. வீரர்கள் விளையாடிய நேரத்தை விட மழை பெய்த நேரம்தான் அதிகம். அப்படி இருந்தும் கூட தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், முரளி விஜய் பின்னிப் பெடலெடுத்து விட்டனர். அஜிங்கியா ரஹானா தனக்குக் கிடைத்த கேப்பில் அட்டகாசமாக ஆடி 98 ரன்களைக் குவித்தார். அஸ்வின் 5 விக்கெட்களை அள்ளினார். ஹர்பஜனும் 3 விக்கெட் சாய்த்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு இந்திய அணியினருக்கு சாஸ்திரி டின்னர் விருந்தளித்தார். டாக்காவில் உள்ள ஒரு கிளப்பில் இந்த விருந்து நடந்தது. அப்போது வீரர்களிடையே சாஸ்திரி பேசுகையில், போட்டி டிராவில் முடிந்தாலும் இது இந்தியாவுக்கு தார்மீக ரீதியில் வெற்றியாகும். காரணம், எதிரணியினர் எந்த சந்தர்ப்பத்திலும் ஆதிக்கம் செலுத்தாத அளவுக்கு இந்தியாவின் தாக்குதல் இருந்தது. எனவே அதுவே வெற்றிதான் என்றார் சாஸ்திரி.
இந்த விருந்துக்கு இன்னொரு காரணமும் உள்ளது. டெஸ்ட் போட்டிக்கு மட்டும் சேர்க்கப்பட்டிருந்த ஹர்பஜன் சிங், விருத்திதமான் சாஹா ஆகியோர் இன்று தாயகம் திரும்பவுள்ளதால் அவர்களுக்காகவும் இந்த விருந்தை கொடுத்தாராம் சாஸ்திரி.
வருகிறார் டோணி
ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் டோணியும், அணியில் இணையும் பிற வீரர்களும் இன்று டாக்கா வந்து சேருகிறார்கள். இன்று ஓய்வு நாள். நாளை இந்திய அணியினர் மிர்பூரில் பயிற்சியைத் தொடங்குகின்றனர்.