'கோச்' இன்டர்வியூ நடந்தபோது கங்குலியால் அவமரியாதை.. மவுனம் கலைத்த ரவி சாஸ்திரி சீற்றம்
மும்பை: இந்திய பயிற்சியாளர் நேர் காணலின்போது தன்னை சவுரவ் கங்குலி அவமரியாதை செய்துவிட்டார் என்று முன்னாள் வீரரும், இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தவருமான ரவி சாஸ்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் நேர் காணல் சமீபத்தில் நடைபெற்றது. 21 பேர் விண்ணப்பித்த நிலையில், ரவி சாஸ்திரி, கும்ப்ளே, வெங்கடேச பிரசாத் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், நேர் காணலின்போது, சச்சின், லட்சுமணன் உள்ளிட்டோர் அடங்கிய கிரிக்கெட் அறிவுரை வழிகாட்டு குழுவில் இடம் பெற்றிருந்த கங்குலி மட்டும் ஆப்சென்ட் ஆகிவிட்டார்.

அதிருப்தியில் சாஸ்திரி
நேர்காணலில் அனில் கும்ப்ளேயை பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து ரவி சாஸ்திரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். இருப்பினும் இதுவரை கங்குலி மீது நேரடியாக அவர் தாக்குதல் தொடுக்காமல் இருந்தார்.

பனிப்போர்
டிவி சேனல் ஒன்றுக்கு தற்போது அளித்துள்ள பேட்டியில் ரவி சாஸ்திரி, தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ளார். கங்குலிக்கும் அவருக்குமான பனிப்போர் இதன் மூலம், அம்பலத்திற்கு வந்துள்ளது.

அவமரியாதை
ரவி சாஸ்திரி கூறியதாவது: நேர் காணலின்போது கங்குலி பங்கேற்காமல் இருந்தது என்னை அவமரியாதை செய்வதை போன்றது என்று உணர்ந்தேன். இப்படி அவர் செய்திருக்க கூடாது.

பணியில் அலட்சியம்
நேர் காணலில் வருவோரை அவமானப்படுத்துவது, அலட்சியப்படுத்துவது என்பது, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பணியில் அலட்சியம் காட்டுவதுதான். எனவே, இனிமேலாவது தனக்கு கொடுத்துள்ள பொறுப்பை சரியாக கங்குலி நிறைவேற்ற வேண்டும். முக்கியமான நேர் காணல்களில் பங்கேற்க வேண்டும்.

நல்ல அணி
என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக அனில் கும்ப்ளேவின் தேர்வை குறை சொல்ல மாட்டேன். நல்ல ஒரு அணி கும்ப்ளேயிடம் கிடைத்துள்ளது., அதை மேம்படுத்தும் பொறுப்பு அவரிடம் உள்ளது. கடந்த 18 மாதங்களாக இயக்குநர் என்ற வகையில் இந்திய அணியை மேம்படுத்தினேன். எனவேதான் நான் தேர்வாகாமல் போனது அதிருப்தியளிக்கிறது. இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications