ஐபிஎல் நிர்வாகக் குழுவிலிருந்து ரவி சாஸ்திரி நீக்கம்.. கும்ப்ளேவின் பிசிசிஐ பதவியும் பறிப்பு
மும்பை: ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பின் தலைவராக மீண்டும் ராஜீவ் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் நிர்வாகக் குழுவிலிருந்து இந்திய அணியின் இயக்குநராக செயல்படும் ரவி சாஸ்திரி நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல மாற்றங்களையும், நீக்கங்களையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இன்று மும்பையில் கிரிக்கெட் வாரியத்தின் 86வது வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில் முக்கிய முடிவாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் பதவியிலிருந்து சீனிவாசனை நீக்கி விட்டு அந்த இடத்தில் பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகரை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதுதவிர பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட இதர முடிவுகள்:
- இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருக்கும் ரவி சாஸ்திரி, ஐபிஎல் நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
- ஐபிஎல் தலைவராக ராஜீவ் சுக்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டது.
- பிசிசிஐ டெக்னிக்கல் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே நீக்கப்பட்டார்.
- அவரது இடத்தில், அதாவது புதிய தலைவராக் கங்குலி நியமனம்
- இந்திய வீரர்கள் தேர்வுக் குழுவிலிருந்து ராஜீந்தர் சிங் ஹான்ஸ், ரோஜர் பின்னி நீக்கம்
- புதிய தேர்வுக் குழு உறுப்பினர்களாக ககன் கோடா, எம்.எஸ்.கே. பிரசாத் நியமனம்
- இந்தியாவில் மேலும் ஐந்து மைதானங்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான மைதானங்களாக சேர்க்கப்படுகின்றன.
- விசாகப்பட்டனம், ராஞ்சி, இந்தூர், புனே, ராஜ்கோட் ஆகியவையே அவை. ரோஜர் பின்னிக்குப் பதில் நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.கே பிரசாத், முன்னாள் விக்கெட் கீப்பர் ஆவார்.
- ரோஜர் பின்னியின் மகன் ஸ்டூவர்ட் பின்னி இந்திய அணியில் இணைந்து விளையாடி வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
- மகனை வீரராக வைத்துக் கொண்டு தந்தை தேர்வாளராக இருப்பது முரண்டபாடக இருப்பதால் ரோஜர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
- மாற்றங்களுக்குப் பிறகு தேர்வுக் குழுவின் உறுப்பினர் விவரம்: விக்ரம் ரத்தோர் (வடக்கு மண்டலம்), சந்தீப் பாட்டீல் (மேற்கு மண்டலம் - தலைவர்), ராஜீந்தர் ஹன்ஸ் (மத்திய மண்டலம்), பிரசாத் (தென் மண்டலம்), சபா கரீம் (கிழக்கு மண்டலம்).
சமீபத்தில் மும்பை வாங்கடே மைதான பிட்ச் தொடர்பாக அதன் கியூரேட்டர் சுதிர் நாயக்குடன் ரவி சாஸ்திரி மோதினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரவி சாஸ்திரி மீது பிசிசிஐயிடம் புகார் கொடுத்திருந்தார் கியூரேட்டர் சுதிர் நாயக் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சாஸ்திரியின் பதவி பறி போயுள்ளது.


Click it and Unblock the Notifications