குவியும் பாராட்டு
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் தான் தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். 113 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 125 ரன்களை விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பண்ட் அடிக்கும் முதல் சிக்ஸர் இதுதான் ஆகும். அவரின் முதல் டெஸ்ட் சதமும் இங்கிலாந்தில் தான் அடித்திருந்தார்.
ஆட்ட நாயகன் விருது
இதனையடுத்து 3வது ஒருநாள் போட்டிக்கான "ஆட்ட நாயகன்" விருது ரிஷப் பண்ட்-க்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், இந்த இன்னிங்ஸை வாழ்நாளில் எப்போதும் மறக்கமாட்டேன். இக்கட்டான சூழலில் எதுகுறித்தும் கவலை கொள்ளாமல் விளையாடினால் போதும், எல்லாம் சரியாக நடக்கும். அதை தான் நான் பின்பற்றினேன் என மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
சுவாரஸ்ய வீடியோ
இந்நிலையில் விருது நிகழ்ச்சி முடிந்தவுடன் பண்ட் செய்த குசும்பு வேலை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்த போட்டி முடிந்தவுடன் களத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருந்தார்.
பண்ட் தந்த பரிசு
அப்போது அவரை நோக்கி ஓடி வந்த ரிஷப் பண்ட், சிறிது நேரம் பேசிவிட்டு, திடீரென கையில் இருந்து மதுபான பாட்டிலை பரிசாக கொடுத்துவிட்டு சென்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரவி சாஸ்திரி சக வர்ணனையாளர்களிடம் காண்பித்து சிரித்து மகிழ்ந்தார். பண்ட்-ன் குசும்பு தனத்தை பார்த்து ரசித்த ரசிகர்களும் வீடியோ எடுத்து இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்.
நல்ல உறவு
ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த போது தான் ரிஷப் பண்ட் அறிமுகமானார். மிகவும் இளம் வயதாக இருந்த போதும் ரிஷப் பண்ட் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த ரவி சாஸ்திரி, தோனிக்கு அடுத்து, முதன்மை விக்கெட் கீப்பராக உருவாக்கினார். இன்று அதற்கான பலன்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.