மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார்கள் யார் என்ற விவாதம் அனல் பறக்கும் நிலையில், பலரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் போன்ற இளம் வீரர்களைக் கைகாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இவர்கள் யாருமல்ல, இளம் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தான் இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய நட்சத்திரம் என்று அடித்துச் சொல்லி, ஒரு புதிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார்.

சமீபத்தில் ஒரு விளையாட்டு ஊடகத்திற்குப் பேட்டியளித்த ரவி சாஸ்திரியிடம், "இந்தியாவின் வளரும் நட்சத்திரம் யார்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், "இதில் எந்த சந்தேகமும் வேண்டாம், அது சுப்மன் கில் தான். அவர் இன்னும் பல ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சுவார்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை நாம் பார்த்தோம். அவருக்கு வயது வெறும் 25 தான். இந்த அனுபவத்தில் அவர் இன்னும் மெருகேறுவார். அவருடைய பேட்டிங்கில் ஒரு கம்பீரம் இருக்கிறது. பார்க்க மிகவும் அழகாக இருக்கும். பெரிய இன்னிங்ஸ்களை ஆடும் திறமையும் அவரிடம் உள்ளது," என்று கில்லின் ஆட்ட நுணுக்கங்களைப் புகழ்ந்து தள்ளினார்.
ரவி சாஸ்திரியின் இந்தப் புகழ்ச்சிக்குக் காரணம் இல்லாமல் இல்லை. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில், 25 வயதிலேயே கேப்டன் பொறுப்பை ஏற்ற கில், அந்த அழுத்தத்தையும் மீறி 754 ரன்களைக் குவித்து அசத்தினார். இதில் நான்கு சதங்களும் அடங்கும்.
இவரது அபாரமான ஆட்டத்தால், இந்தியா 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த வருடத்தின் இதுவரையிலான ஆட்டத்தில், அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 6 சதங்களுடன் 1234 ரன்களைக் குவித்து, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியை வழிநடத்தும் பெரும் பொறுப்பு கில்லின் இளம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து தொடரிலேயே தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சி முதிர்ச்சியால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது வேகப்பந்துவீச்சில் கலக்கும் ஆகாஷ் தீப் ஆகியோரை இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்த்து வரும் நிலையில், ரவி சாஸ்திரியின் பார்வை சுப்மன் கில் மீது திரும்பியுள்ளது. கில்லின் நேர்த்தியான ஆட்டமும், களத்தில் அவர் காட்டும் நிதானமும், அவரை நீண்ட காலத்திற்கு இந்திய அணியின் தூணாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.