கொல்கத்தா: இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2016 டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் வரை அவர் இயக்குநராக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதேபோல உதவிப் பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் இதே காலகட்டம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டங்கன் பிளட்சர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்ற பிறகு புதிய பயிற்சியாளரை நியமிக்காமல் ரவி சாஸ்திரி தலைமையிலான குழுவை வைத்து சமாளித்து வருகிறது இந்திய அணி.
தற்போது இவர்களது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடர் வரை இவர்களது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரவி சாஸ்திரி தவிர பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலத்தையும் நீட்டித்துள்ளனர்.
கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமண் தலைமையிலான ஆலோசகர் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி இந்தியாவில் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியை கேப்டன் டோணி தலைமையில் இந்தியா சந்திக்கும்.