“கபிலிடம் இருந்த அந்த ஒரு விஷயம்.. பாண்ட்யாவிடமும் இருக்கு”.. ரவி சாஸ்திரி கருத்து.. காரணம் என்ன?
வெல்லிங்டன்: இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவிடம் இருந்த ஒரு விஷயத்தை ஹர்திக் பாண்ட்யாவிடம் பார்ப்பதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவது தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் அடுத்த கேப்டனாக அவர் தான் பேசப்பட்டு வருகிறார்.

பாண்ட்யாவின் கேப்டன்சி
ரோகித் சர்மா, விராட் கோலி, உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் இளம் வீரர்களை பாண்ட்யாவின் கையில் ஒப்படைத்துள்ளனர். முழு பலத்துடன் உள்ள நியூசிலாந்து அணியை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

ரவி சாஸ்திரி பாராட்டு
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். அதில், ஹர்திக் பாண்ட்யாவிடம் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி இயற்கையாகவே உள்ளது. அது அணி வீரர்களிடமும் எதிரொலிக்கும். கபில் தேவ் கேப்டனாக இருந்த போது நடந்த விஷயங்கள் எனக்கு நினைவு இருக்கிறது. ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர், அதிரடி ஆல்ரவுண்டர் அணியை வழிநடத்தினால் அதன் முடிவே வேறாகும்.

காத்துள்ளேன்
அதுபோன்ற கேப்டன் இருப்பது 20 ஓவர்களையும் வீரர்களை சோர்வடைய விடாமல் உற்சாகத்துடனேயே வைத்திருக்கும். அவரை போன்றே மற்ற வீரர்களும் செய்ய வேண்டும் என்ற ஊக்குவிப்பை ஏற்படுத்துவார். எனவே ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவதை பார்க்க காத்துக்கொண்டுள்ளேன்.

அடுத்த தோனியா?
ஹர்திக் பாண்ட்யா ஏற்கனவே தோனியை போன்று செயல்படுகிறார் என்ற பேச்சுக்கள் உலா வருகின்றன. இந்திய அணி எப்படிபட்ட இக்கட்டான சூழலில் இருந்த போதும், ஹர்திக் பாண்ட்யா மிகவும் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்துள்ளார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரே பாண்ட்யாவின் செயல்பாடுகள் குறித்து அடிக்கடி பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications