
பயிற்சியாளர் பதவி
2019 உலகக்கோப்பை தொடருடன் தற்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிகளில் இருக்கும் அனைவரின் காலமும் முடிவடைகிறது. அவர்களுக்கு நேரடியாக பதவி நீட்டிப்பு வழங்காமல் விண்ணப்பம் பெற்று நேர்முகத் தேர்வு வைத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முடிவு செய்தது பிசிசிஐ.

கமிட்டி நியமனம்
இதற்காக கபில் தேவ் தலைமையில் மூன்று நபர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாந்தா ரங்கசாமி மற்றும் அன்ஷுமன் கெயிக்வாட் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற இருவர்.

ரவி சாஸ்திரி உறுதி
பயிற்சியாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், அன்ஷுமன் கெயிக்வாட் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கடந்த ஆண்டுகளில் சிறந்த முடிவுகளை (வெற்றிகளை) பெற்றுக் கொடுத்த ரவி சாஸ்திரிக்கு தான் அந்த பதவி கிடைக்கும் என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

மற்ற பதவிகள்
எனவே, கிட்டத்தட்ட மற்ற பதவிகளுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும் எனவும் கூறி அதிர வைத்துள்ளார். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் தலைமைப் பயிற்சியாளர் பதவி தவிர்த்து, பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் ஆகிய இடங்களுக்கு மட்டும் தான் புதியவர்கள் வர வாய்ப்புள்ளது.

விண்ணப்பித்தவர்கள் யார்?
என்னதான் ரவி சாஸ்திரி வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார் என கூறினாலும், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அளித்துள்ளதாக கூறப்படும் நபர்கள் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. மகிளா ஜெயவர்தனே, டாம் மூடி, கேரி கிர்ஸ்டன், மைக் ஹெஸ்ஸன், ராபின் சிங் என எல்லோருமே பயிற்சியாளர்களாக பெரிய வெற்றிகளை தேடிக் கொடுத்தவர்கள்.

இதை மீறி கிடைக்குமா?
இவர்களை மீறி ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? அப்படி என்றால் எதற்கு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் பெறப்பட்டது என் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்திய கிரிக்கெட்டில் ஏற்கனவே பல கேலிக் கூத்துக்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஜாம்பவான்கள் எல்லோரையும் புறக்கணித்து விட்டு, கேள்வியே கேட்காமல் ரவி சாஸ்திரியை தேர்வு செய்தாலும் அதில் ஆச்சரியமில்லை.


Click it and Unblock the Notifications