சென்னை : இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட் வீழ்த்தியதை முன்னிட்டு தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பின் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் வீடியோ மூலம் பேசிய ரவீந்திர ஜடேஜா, அஸ்வினுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமை குறித்து பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி தவிர்க்க முடியாத சுழற் பந்துவீச்சு ஜோடியாக மாறி விட்ட நிலையில், அஸ்வின் 500 விக்கெட் என்ற மைல்கல் சாதனை படைத்ததை அடுத்து அவருடன் இணைந்து நீண்ட நாட்களாக பந்து வீசி வரும் ஜடேஜா அவரை பாராட்டி பேசினார்.

முதலில் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதற்கும், 500 விக்கெட்கள் வீழ்த்தியதற்கும் வாழ்த்து கூறினார் ஜடேஜா. அதன் பின்னர் தனக்கும் விக்கெட் வீழ்த்த யோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார். அதன்பின் தனக்கும், அஸ்வினுக்கும் உள்ள ஒற்றுமை குறித்து பேசினார்.
அப்போது இருவருமே ரவி என்ற பெயரைக் கொண்டவர்கள். ஆனால், நான் "ரவி இந்திரன்", அவர் "ரவி சந்திரன்" என்றார். அதன் பின் "தில்லுமுல்லு" திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனமான "மீசை வச்சவன் இந்திரன், மீசை வைக்காதவன் சந்திரன்" என்ற வசனத்தை கூறினார் ஜடேஜா. ஜடேஜா எப்போதும் மீசையுடன் இருக்கும் நிலையில், அஸ்வின் மீசை வைத்துக் கொள்வதில்லை. என்பதை குறிப்பிட்டு இப்படி கூறி இருந்தார் ஜடேஜா. சமூக வலைதளங்களில் ஜடேஜா பேசிய இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பின் சார்பில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதை பாராட்டும் வகையில், 500 தங்கக்காசுகள் மூலம் "500" என்று எழுதப்பட்டு அஸ்வினுக்கு பரிசளிக்கப்பட்டது. மேலும், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதை குறிக்கும் வகையில் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் ரவிச்சந்திரன் அஸ்வின், அவர் மனைவி பிரீத்தி, இரு மகள்கள் கலந்து கொண்டனர்.